Friday, April 28, 2006

விபத்து

அன்பு நண்பர்களே இன்று ஒரு மிக சோகமான சம்பவத்தை சொல்ல போகிறேன்.

நாம் பல விபத்துகளை கேள்விப்படுகிறோம். கோரசம்பவங்களை பார்க்கிறோம். ஒரு
நிமிடம் அதற்காக கவலைப்பட்டுவிட்டு, பிறகு அதை மறந்து விடுகிறோம்.

போன வெள்ளிக் கிழமை அதிகாலையில் ஒரு தொலைபேசி செய்தி, மங்காப் சிக்னலில்
ஒரு பெரிய விபத்து என்றும் அதில் நண்பர் ஒருவரின் காருக்கு அடிப்பட்டது
என்றும். அந்த நண்பர் ரவிச்சந்திரன் மிகவும் சுறுசுறுப்பானவர். அவரது இரு
குழந்தைகளும் மிகவும் புத்திசாலிகள். பெரிய பெண் வர்ஸிணி செஸ் சாம்பியன்,
எட்டாவது வகுப்பு படிக்கிறாள், சிறியவன் பிரவிண், ஆறாம் வகுப்பில்.
ஒரு செஸ் போட்டியில் கலந்துகொள்ள சால்மியாவிலிருந்து மங்காப் போகும்போது
சிவப்பு விளக்கு வருவதற்குள் கடந்து விடலாம் என்று கைப்பேசியில்
பேசிக்கொண்டே கொஞ்சம் வேகமாக வண்டியை எடுக்கையில் நேர் எதிரில் பச்சை
விளக்கு வந்துவிடும் என்ற எதிர் பார்ப்பில் வேகமாகவந்த பேருந்து காரின்
பக்கவாட்டில் மோதி....கார் அப்படியே அப்பளமாக நொருங்கி. பின்னால் வந்து
கொண்டிருந்த நண்பர்கள் உடனடயாக அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு
சென்றிருக்கிறார்கள். அங்கு சில மணி நேரங்களில் சிறுவன் பிரவிண்
சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டான். தந்தை ரவிசந்திரனுக்கு லேசான
அடி. வர்ஸிணி தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில்.
தன் குழந்தையை தானே கொன்றுவிட்டோமே என்று ரவியின் கதறலையும், பையன்
வீட்டில் குறும்பு செய்வானே என்று அப்பாவுடன் கட்டாயப்படுத்தி
அனுப்பிவிட்டோமே என்ற தாயின் கதறலையும் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

எப்படியோ நடந்தது நடந்துவிட்டது இனி ஆகவேண்டியதை பார்க்கலாம் என்று
சிறுவனின் உடலை இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்டு (இந்த நேரத்திலும்
சிறுவனின் கண்ணை தானமாக கொடுத்த பெற்றோர்) இந்தியாவிற்கு விமானத்தில்
தந்தை எடுத்து சென்றார். சிறுமி வர்ஸிணி மிக மெதுவாக தேறிவந்தாள்.
சிறுவனின் சடங்குகளுக்காக தந்தை சென்னையில். நேற்று என் மகள் செளமியா
வர்ஸினியை பார்க்க (இருவரும் ஒரே பள்ளியில்) மருத்துவமனைக்கு
சென்றிருக்கிறாள். தீவிர கண்காணிப்பில் இருந்த அக்குழந்தையை
பார்த்துவிட்டு ஒரே கதறலுடன் வந்துவிட்டாள்.

இன்று வெள்ளிக்கிழமை அதே அதிகாலை, மீண்டும் நண்பரிடமிருந்து தொலைபேசி....
வர்ஸிணியும் நம்மை விட்டு பிரிந்துவிட்டாள்...ஆம் அவள் உயிரையும் இறைவன்
கொண்டு சென்றுவிட்டான்.

நடனபயிற்சிக்காக சென்ற செளமியாவிற்கும் விஷயம் தெரிந்து அங்கேயே
செயலிழந்து உட்கார்ந்துவிட்டாள். அவளையும் கூட்டிக்கொண்டு
மருத்துவமனைக்கு சென்று வர்ஸினியின் முகம் பார்க்கும்பொழுது........

தனியாக இருக்கும் அந்த தாயின் கதறல்.... பார்க்க போன நண்பர்களின் சோகமும்
அழுகையும், என் மகள் செளமியாவிற்கு ஆறுதல் சொல்லா முடியாமல் என்
மனைவியின் அழுகை.... யாரும் யாருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது என்று
புரியாமல்..ஒவ்வொருவரும்...

அந்த பெற்றோரின் நிலைமையை நினைத்தால் ........ கொடுமையிலும் கொடுமை.
இந்த நேரத்திலும் அந்த தந்தை தன் மகளின் கண்ணை தானமாக கொடுக்க சம்மதித்தது.....

விபத்துக்கள் நேரிடும். ஆனால் நம் அஜாக்கிரதை எப்படிப்பட்ட கொடுமையை
ஏற்படுத்தியுள்ளது பாருங்கள். வண்டி ஓட்டும்போது ஜாக்கிரதையாக ஓட்டுவது
மட்டுமல்லாது செல்பேசியில் பேசுவதை தவிர்த்தால் எவ்வளவோ விபத்துக்கள்
தவிர்க்கப்படும். அந்த குழந்தைகள் செய்த பாவம் தான் என்ன?




--
மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/

2 Comments:

At 4:28 AM, Blogger மா சிவகுமார் said...

குழந்தைகளைப் பிரிந்து தவிக்கும் அந்த பெற்றோரின் மனம ஆறுதல் அடைய பிரார்த்தனைகள்.

 
At 4:22 AM, Blogger முத்தமிழ் said...

நண்பர்களே இந்த இளம்பிஞ்சுகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். உங்கள் அனைவரின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4