Saturday, February 25, 2006

விழிகள்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் காசி கணேசன் அரங்கநாதன் எழுதிய தேன் சிந்தும் கவிதை

விழிகள்

உன் விழித்தபடி விழித்திருந்த
விழிகள்
என்னைச் சுடுகின்றன.

உன் கேள்விகள் கலையாத மௌனம்...

தாயே,
படிப்பறிவில்லாததால் நீ
பலவந்தப்படுத்தப்பட்டாயோ?

என் இயற்கை அன்னையும்
படிப்பறிவில்லாதவளே.

காடுகள், மலைகள், ஓடைகள்
ஆறுகளின் வழித்தடங்கள்
எல்லாம் கற்பிழந்தன.

சுவர்களுக்கெல்லாம் காது முளைக்கும்போது,
முடைநாற்றமெடுக்கும் உண்மைகள்
வீதிகளில் கொண்டுவந்து கொட்டப்படும்போது,
உலகத்திலுள்ள ஆண்களெல்லாம்
ஒட்டுமொத்தமாக,
நடுவீதியில் நின்று தீக்குளிப்பார்கள்.


2.

உலகம் முழுவதும் கற்பிழந்தாலும்
என் தங்கை கற்புள்ளவள், என்று
மார்தட்டும் எனது நண்பா..

உன் இயற்கை அன்னையை இன்னும்
எத்தனை முறைதான் கற்பழிப்பாய்...
போதும்.

3.

சென்ற நூற்றாண்டிலேயே இறந்துபோன
என் தோழிக்கு,
இந்த உதவாக்கரையின், ஒன்றுக்கும் உதவாத
ஆறுதல் கடிதம்.

இதனால் நீ ஆறுதலடைவாயா?
இல்லை,
இந்த வெற்று ஆறுதல்
நொண்டி சமாதானம் சரியா?

உன்னுடைய இறவா
விழித்திருந்து விழிக்கும் விழிகள்

உலகின் ஒவ்வொரு கலங்கரை விளக்கிலும்
எனது இரவின் ஒவ்வொரு நட்சத்திரத்திலும்
நின்று விதிர்க்க,

ஒவ்வொன்றுக்காய் எண்ணி... எண்ணி...
எத்தனைகோடி சமாதானங்கள்,
நொண்டி சாக்குகள்.

ஒன்றுமறியாதவளே,
உன் ஒரு சிறு பார்வையில்
நாணிக் கோணிக் குறுகி நிற்கும்
ஆன்றோர் எனப் பிதற்றும் இவ்வுலகு.


இயலாமை
-----------------

நான் கடமைமறந்தேன்.

எம் போன்ற அறிவற்ற அறிவாளிகள்
கடமை மறந்தோம்.

எம் அன்னையின்
மேல்துணி களையப்பட்டது.

எங்கள் வரலாறு களங்கப்பட்டது.

ஏதும் செய்யாது, இயலாது
விதிமுடியும் நாளிலே
ஊனமுள்ள மனிதர்களாய்
வெறிதே
இந்த உலகைவிட்டுப் போவோம்.


மதவாதி
--------------

பெண்ணைக் கற்பழித்த பாவத்தைப்போக்கக்
கடவுளென்றாய்.
போதவில்லை...

பஞ்ச பூதங்களின் பிரதிநிதியென்றாய்.
தீரவில்லை...

பூமியென்றாய்..
எல்லாம் வல்ல இயற்கையென்றாய்...

கடவுளைவிட
ஏன்,
கடவுளைவிடப்பெரிய உன்னைவிடப்
பெரிய
தாய், என்றாய்
தீரவில்லை.

முதல் பாவத்தின் சுவடுகளே
இன்னும் அழியாது
எச்சில்பட்ட முதுகோடு ஓடிக்கொண்டிருக்கிறாய்...

இன்னும்,
புதிது புதிதாக
தினந்தோறும் பல பாவ மூட்டைகள்

எந்தக் கடலில் கொட்டுவாய்?

விடுதலை
----------------

அவிழ்த்துவிடு
உன்
சுயநலச் சுருக்குப்பைக்குள்
சுருண்டுகிடக்கும் பூதங்களை.
பயமா???

ஆம், பயந்தான்
வெளியில் வந்த பூதங்கள்
உன்னை விழுங்கிவிடும் என்ற பயம்.

உன் பயங்கள் ஒவ்வொன்றையும்
வீரம் என்று மொழிமாற்றம் செய்து
உன் மனதுள் கேட்கும் மரண ஓலங்களிலிருந்து
தப்ப,
வெளியில் பிளிறிப்
பறையடித்துக் கொண்டிருக்கிறாய்.

எத்தனை நாள் வாழும் உனது வாழ்வு???

முற்றும்.

நவ.2004.

கால் நூற்றாண்டுக் கிழவர்கள

கிராமத்தில் என் பாட்டனார்..
சூரியன் உதிக்கையிலே உதயமாகி..
ஏறு பூட்டி..
கலப்பை எடுத்து..
உச்சி வெயிலிலே கூழ் அருந்தி..
மாமர நிழலில் ஒய்யாரமாய் ஓய்வெடுத்து..
தினம் தினம் மாடாய் உழைத்து
சூரியன் மறைகையில் உறங்கி..
முக்கால் நூற்றாண்டு வயதை கடந்து
என்றாவது முனகிக்கொண்டு..
"கால் வலிக்குது பேராண்டி..பிடித்து விடேன்.."..

இதோ நகரத்து சொகுசில் வாழும் இளசுகள்..
சாவிப்பலகையில் கை தொலைத்து..
திரையகத்தில் கண் வைத்து
சூரியனை வேண்டாத விருந்தாளியாக்கி..
நித்தம் நித்தம் உடல் உபாதைகள் ..
"முதுகு வலி மச்சி.."
"கை வலி மாமா.."..
"தலை நரைச்சிடுச்சிடா.."
என்ன தான் செய்வது இந்த
கால் நூற்றாண்டுக் கிழவர்களை?
ஆரோக்கியமே வாழ்வின் அச்சாணி

கற்றதும் பெற்றதும்

அம்மா கையால் அழகாய் கற்றது இருநூற்றி நாற்பத்தேழு
"தமிழ் எழுத்துக்கள்"
சாந்தி டீச்சர் அடித்து அடித்து தந்தது இருபத்தி று..
"ஆங்கில எழுத்துக்கள்"..
வரைபடத்தில் வண்ணம் தீட்டி கற்றது இருபத்து இரண்டு., (அப்போது)
"இந்திய மாநிலங்கள்"
உருண்டை உருண்டையாய் சுற்றுதென அதிசையத்தது ஒன்பது
"சூரியக் குடும்ப கிரகங்கள்"
யார் கோடு போடாமல் பிரித்ததென வியந்தது ஏழு
"பூமியின் கண்டங்கள்"

வளர வளர கற்றல் எண்ணிக்கை குறையுமோ??
கல்லூரி முடித்து...
மூன்றாண்டுகளாய் முக்கி முக்கி கற்றதும்
நோகாமல் நோன்பெடுக்க பெற்றதும்
மூன்று
"கட்" .. "காப்பி"..."பேஸ்ட்". .

இங்கே..
கற்றதும் பெற்றதும்
Cutறதும் Pasteறதும்

-விழியன்

Tuesday, February 21, 2006

நட்சத்திர கிரிக்கட் - 2 (அன்பு செல்வன்)

நட்சத்திர கிரிக்கட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.பிரட்லீ பந்துவீச தயாராகிறார்.முதலில் பேட் செய்ய புரட்சித்தமிழன் சத்யராஜ் வருகிறார்.பேட்டுக்கு பதில் சிலம்பக்குச்சியை ஏந்தி வருகிறார் புரட்சித்தமிழன்.

"சிலம்பக்குச்சியை வைத்துக்கொண்டு ஆடினால் பவுன்சர் போடுவேன்" என பிரட்லீ பயமுறுத்துகிறார்.சத்யராஜ் சிரிக்கிறார்."என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறையே தம்பி " என சிரிக்கிறார்.

"என்னம்மா கண்ணு,பவுன்சர் போடுவியா?உங்க டீம்ல இருக்கற 11 பேரையும் ஒரே சமயத்துல பந்து வீச சொல்லுடா கண்ணு" என்கிறார்.

டீமில் உள்ள 11 பேரும் சுற்றி நின்றுகொண்டு பந்துகளை எறிகின்றனர்.சிலம்பக்குச்சியை சுழற்றி அத்தனை பந்துகளையும் தட்டி ஆடுகிறார் சத்யராஜ்.திருமதி பழனிச்சாமி படத்தில் வருவது போல் ஒரு பந்து கூட அவர் மீதோ விக்கட் மீதோ படவில்லை.பந்துவீசி வீசி அனைவரும் களைப்படைகின்றனர்.ரசிகர்கள் ஆரவாரம் விண்ணை பிளக்கிறது.தோல்வியை ஒப்புக்கொண்டு சத்யராஜை வழிஅனுப்பி வைக்கிறார் ரிக்கிபான்டிங்.

அடுத்ததாக விசு பேட் செய்ய வருகிறார்.அவரை வினோதமாக பார்க்கிறார் ப்ரெட்லி.அவர் அருகே விசு போகிறார்.

"ஏம்பா கண்ணா பிரட்லீ,என்னை உனக்கு முன்னமே தெரியுமா?"

"தெரியாதே" என்கிறார் பிரட்லீ.

"முன்ன பின்ன என்ன தெரியாதுங்கறே.அப்ப பேட் பண்ண வந்தது நான் தான்னு உனக்கு எப்படி தெரியும்?" என கேட்கிறார் விசு.

தலை சுற்றி பிரட்லீ மயங்கி விழுகிறார்.

"விசு,விசுன்னு காத்தடிக்குதில்ல,அதான் தம்பி மயங்கி விழுந்துட்டான்" என்கிறார் விசு.பிரட்லீயை தூக்கிக்கொண்டு போக வந்தவர்கள் அவரையும் சேர்த்து தூக்கிக்கொண்டு போகிறார்கள்.

அடுத்ததாக கமல் களமிரங்குகிறார்.ஸ்பின் பவுலிங் போட ஷேன் வார்ன் தயாராகிறார்.மெதுவாக கமல் ஷேன் வார்னிடம் போகிறார்.இரு விரல்களை மடக்கி இந்தியன் ஸ்டைலில் மெதுவாக ஷேன் வார்னின் கையில் வர்மத்தட்டு தட்டுகிறார்.ஷேன் வார்னால் கையை திருப்பவே முடியாமல் போகிறது.

"நிறுத்துங்க,இது அக்கிரமம்" என சத்தம் போடுகிறார் ரிக்கி பான்டிங்.கமலுக்கு கோபம் வந்துவிடுகிறது.

மெதுவாக அவர் அருகே போகிறார்.காதை பிடித்து ஒரே கடி."ஐயோ" என அலறுகிறார் பான்டிங்."கடவுள் பாதி,மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்" என பாடுகிறார் கமல்.வந்திருப்பது ஆளவந்தான் கமல் என புரிந்துகொண்டு அவரை பெவிலியனுக்கு கெஞ்சிக்கூத்தாடி அனுப்பி வைக்கின்றனர்.

அடுத்ததாக மாறுவேஷத்தில் ஒருவர் பாவமாக வருகிறார்."பாக்க அப்பாவி மாதிரி இருக்காரே,இவருக்கு பந்து போடவே மனசு வரலை" என்கிறார் மெக்ராத்.

"இவர் பாக்க பாவமா தான் இருப்பார்.ஆனா இவர் யார்னு தெரிஞ்சா நீங்க ஓடிடுவீங்க" என்கிறார் அம்பயர்.

"இவர் யார்? என கேட்கிறார்.

"இவர் சூர்யா.என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்,காக்க காக்க அன்புச்செல்வன்" என்கிறார் அம்பயர்.

ஆஸ்திரேலியாகாரர்கள் அனைவரும் விட்டலாச்சாரிய படத்தில் வருவது போல் மாயமாக மறைகின்றனர்.

தீஈஈஈவிரவாதி

கண்ணே...
உன் உருட்டுக் கட்டை விழிகளால் இப்படி
உருட்டி உருட்டித் தாக்க எங்கு கற்றுக் கொண்டாய்???

பெண்ணே...

உன் பார்வையின்
சோடா பாட்டில் வீச்சில்
சுக்கலாகிப் போனதடி என் உள்ளம்.

உன் நினைவுகள் எனும்

ஆசிட் ஊற்றப்பட்டு
எரிந்து போனது
என் இதயம்.

நான் உன்னிடம் வேண்டி நிற்பதெல்லாம்
பனி மழைபோல் ஒரு முத்தம்.

--------------
தீஈஈஈஇவிரவாதி!
---[ தமிழர் பாதுகாப்புப் பாசறை ]---

முத்தமிழ் கூகிள் குழுமத்தின் குறும்பான உறுப்பினரான அரங்கரின் படைப்பு.

Monday, February 20, 2006

கேள்விழி மகரந்தன் படைப்புகள்

"ஏழைகளின் அவல நிலை"
புத்தகம் வாங்கினேன்
ஆயிரம் ரூபாய்க்கு

இது கவிதை இல்லை கடுதாசி..
-----------------------------------------------------------------------

அன்பு நண்பனே,
நம்பத்தகுந்த ஊடகத்தில் நாம் சந்திக்கவில்லை
ஆயினுமென் நம்பிக்கையின் பாத்திரமானாய்
தேசத்திற்காக உழைக்கும் நீ எனக்காக
இறங்கிவந்து நட்பளித்தாய் கொஞ்சம்..
நேரம் பாராமல் என்னுடம் இருக்கும் நிமிடங்கள்
சந்தோஷத்தின் உச்சகட்ட தருணங்கள்
வாழ்வின் விளிம்பில் நிற்பவன் கூட
உன் கை பிடித்தால் நம்பிக்கை அறிவான்
பொய்யே எல்லாமுமாய் வாழும் உலகிலே
உண்மையாய் ஒர் உறவு நம்மிடம்
காலம் கணக்கு பார்த்து கொண்டுதான் இருக்கிறது
நமது நட்பின் வலுமை வலுக்க..
காதலர் தினம் காதலுருக்கு மட்டுமா?
நம்மை இணைத்ததும் இந்த தேசத்தின் மீதுள்ள காதலே..
அர்த்தமில்லா காதலென்னும் கதையிலே..
அன்பின் அர்த்தமாய் நீ நானும்..
வீரம் மிகுந்த என் அன்பு நண்பனுக்கு
என் பாசமிகு காதலர் தின வாழ்த்துக்கள்

-நட்பான காதலுடன்
கேள்விழி மகரந்தன்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் கவிஞர் கேள்விழி மகரந்தன் எழுதிய இனிய கவிதைகள்

முத்தமிழின் முதல்வன் படைப்பு

முத்தமிழ் கூகிள் குழுமத்தின் முதல் மாத நிறைவை ஒட்டி எழுதப்பட்ட "முத்தமிழ்" பா

முத்தமிழ் பா'

இயற்றியவர்: எங்கள் புலவர் இரவா ஐயா அவர்கள்.


முத்தமிழ் விளைநி லத்தில்

மூழ்கியே கலைப யின்றோம்!

சித்திரம் அறிந்தோம்! நம்மின்

திறந்தனை ஆய்ந்த றிந்தோம் !

வித்தகம் விளைத்துப் பார்த்தோம்!

வீரத்தின் திரனனைக் கண்டோ !

முத்தமிழ் நிலமே என்று,

மோகித்து மகிழ்ந்தி ருந்தோம் !



நடையினால் எண்ணக் கூட்டை

நாடிடும் பறவைக் கூட்டம்!

அடைந்திடும் வேடந் தாங்கல்,

ஆங்கது போலே, ஈங்கு,

மடையென இயலும் இசையும்

மாண்பெனச் சீறிப் பாயும்,

நாடகத் தமிழும் நன்றாய்ப்

பதிந்திடும் பரணி போல!



மறையெனும் குறளை ஈங்கு

மலிந்திடக் கூற வந்தார்,

அறமிடும் புலவர் ஐயா!

அன்பெனும் ஊற்றாம் கோவை,

அகங்தையில் குசும்பர், கூத்துக்

குறும்பையில் சேர்த்துக் கட்டிக்

கலித்தொகை விருந்த ளிக்கும்

கரத்தவர், வேந்தன் அண்ணா!

அறிவினால் செறிவைக் காட்ட

அருந்தமிழ்க் கண் திறப்பார் !

தெளிவுடன் வரலாற் றேட்டைச்

சிறப்புடன் திறந்து காட்டும் ,

திறமுள்ள அன்புச் செல்வன்

சிறந்திடும் கூட மாகும்!

தரமுடன் தமிழின் சொய்யம்

சமைந்திடும் மடத்தின் பள்ளி .

(மடப்பள்ளி - சமயலறை)



குட்டுகள் போடு கின்ற

குன்றென வந்த( திய) தேவர்

பெட்டகம் அரங்கர், அன்பின்

பிழிவெனும் உரை சொல் லாளர் !

கட்டிடும் மனைக்கு நல்ல

காவலும் தூணும் போல,

கட்டுடன் காவல் காக்கும்

கனிமொழி சுதனின் தோழி!



பொறுமைக்குத் தலைமை!. நல்ல

தலைமைக்கும் உவமை!.. மஞ்சூர்

நிறைகுடம் போன்றி ருந்து

நிறையுடை சுந்தர் அண்ணா !

இறையென அருளும் அன்பும்

ஈன்றிடும் அன்பின் பலத்தால்

வலம்வரும் காத லாலே

வளம்பெறும் சக்தி கோமான் (சிவா)

காதலைக் காத லாகக்

காண்டிடக் காதல் செய்வார் !

காதலைக் கவிதை என்பார்!

கவிதையே காதல் என்பார் !

ஆதலின் காதல் தோழன்

ஆகிய நட்பின் நிலவன்!

போதமாய் நட்பைக் கொண்டார்,

போற்றுதற் குரிய ராமர் !



முத்தமிழ் மூச்சாய்க் கொண்டு

முழுமன மாருதி ராமன்!

விழிகுல விழியன், குட்டி

விடைதரும் விடையன்! எட்டுத்

திசையிலும் புகழை ஈட்டும்

இளைஞரில் துடியன் நண்பன் !

பசையுடன் கோடம் பாக்கப்

பக்தனாம் டசிதரன்! அன்பால்,



கலகத்தைச் செய்ய, இலக்கி

யமோஇலக் கியமெனக் கூவி

கலக்கிடும் இரசிங்க...! அன்பால் ,

கடைந்திட்ட அன்புத் தோழன் !



முத்தமிழ் முன்னேற் றத்தில்

மூழ்கிய முபாரக்! வங்கக்

கடலில்கண் டெடுத்த முத்து!

கருத்துக்கு மீனா அக்காள் !

கருணைக்குக் காந்தி அம்மாள்!

பெறுதற் கரிய ஹைமா!

பேற்றுக்குக் கேள்விழி ! தேனின்

பிழிவினை அன்பால் ஈயும்



சேயெனும் அன்புத் தங்கை.

செல்லமாய் துள்ளித் துள்ளி

பாயிரம் பாடும் கோதைப்

பாடலின் பதிகம், மண்ணின்

வாகைக்கு வாழும் அன்பின்

வனப்பினை வளைத்துக் கொண்ட

தோகையும் நடன மாடும்

தொட்டிலாம் முத்தமிழ்த் தோட்டம்!



பூத்திடும் பூக்கள் தன்னில்

பூவிடும் மணத்தைப் போல ,

அறிவியல், ஆன்மீ கத்தை,

ஆனந்த சினிமா தன்னை,

சொற்சிலம் பாட்டம் போலச்

சுழன்றிடும் கட்டுக் கதைகள் !

சித்திரை நிலவைப் போல

சிந்தையைக் கவரும் படங்கள் !



வளைகுடாப் போல் பரந்து

வானத்தைப் போல் உயர்ந்து

தளைத்திடும் போதிலெல்லாம்

தனித்தனிப் பொருள் உணர்ந்து

கிளைத்திடும் குறளின் பொருளும்

கின்னரம் போல் மொழிவார்!



கொஞ்சிடும் தென்றல் போல,

குதூகலம் வீசும் காதல் !

கலித்தொகை தேனின் பாகு!

காவிய மாகும் வீரம்!

பொருள்தரும் தமிழின் சொத்தைப்

பொன்னெனப் போற்றும் பண்பு !

மின்னலாய்க் கண்ணில் தோன்றி

மீண்டிடா வண்ண பாட்டு!

புகைப்படக் கதைகள்! இன்றே

பூத்திட மலரும் நினைவு !



நலந்தரும் சொற்கள்! வண்ண

நடைதரும் ஆடை போல,

தையலால் தையல் செய்யும்

தையலார் தையல் உண்டு!

வையகம் முழுதும் ஆளும்

வாழ்வென இணைந்துள் ளார்கள் !

ஐயமும் அகலும்! ஈங்கே,

ஆணவம் அகந்தை மீளும்!



ஒளிர்ந்திடும் தமிழின் பூக்கள்,

ஒவ்வொறு மணத்தை வீசும்!

தளிர்கின்ற வலையின் பூவின்

தளதள மாலை செய்யவீர்!

இளையவர் பலரும் ஈங்கே,

எழுப்பிடும் எண்ண் மெல்லம்

மிளிர்ந்திட வேண்டும், நாளை !

மேதினி மகிழ்ந்தி ருக்க!

தளிர்க்கரம் பற்றிச் செல்லும்

தன்மகன் போல வாரீர்

---------------------------------------------------
கவிதை இயற்றிய எங்கள் குழு முதல்வனுக்கு,தமிழாசானுக்கு, முத்தமிழின் நன்றியுரை


எங்கள் குறளரசர் அதன் பொருளுக்கும் தான் அரசர், அன்பிலே காட்டும் பண்பிலே தமிழ் உறவாய ஆன என் தந்தை எங்கள் அன்புமிகு இரவா ஐயா,



வார்தைகள் இல்லை எனக்கு வாழ்த்துக்கள் உரைப்பதற்கு, நெகிழ்ச்சீயில் கண்ணில் நீர் பெருகுதே இப்போதெனக்கு, ஐயா. எத்தனை நேரம் இறுக்கமாய் இருந்தாலும் தமிழால், தமிழுக்கு நெருக்கமாய் ஆன உங்கள் உறவு அதன் பால் நீங்கள் காட்டிய அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது. நிறைந்த நன்றிகள். "காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது" என்ற வள்ளுவர் மொழிந்ததற்கேற்ப உங்கள் உதவி மிக மிக மிகப்பெரிது. வாழ்க! முத்தமிழ் ! வளர்க அதன் புகழ்!



'நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை என் தமிழ் தந்த தந்தைக்கு

Sunday, February 19, 2006

தாயைக் காத்த வைணவர்கள் - அன்பு செல்வன்

விஷ்ணுவின் மற்ற எந்த அவதாரங்களையும் விட ராமாவதாரம் அதிக சர்ச்சைக்கு உட்பட்ட அவதாரமாகும்.அதிக அளவில் பட்டிமண்டபங்களில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட விஷ்ணு அவதாரம் ராமாவதாரமாகத் தான் இருக்கும்.சீதையை ஏன் தீக்குளிக்க சொன்னான் ராமன் என்பது பட்டிமணடப வக்கில்கள் மட்டும் எழுப்பும் சர்ச்சையல்ல,பொதுமக்கள் துவங்கி பரமபாகவத வைணவர்கள் வரை நடக்கும் சர்ச்சையாகும்.

சீதை வைணவர்களுக்கு தாய் போன்றவள்.சீதையை வைஷ்ணவர்கள் அழைப்பதே தாயார் என்றுதான்.தாயை கதாநாயகியாக்கி கதை எழுதும்போது ஒரு மகனுக்கு என்னென்ன பிரச்சனை வருமோ அதெல்லாம் ராமாயணத்தை எழுதிய வைஷ்ணவர்களுக்கும் வந்தது.

மற்ற எல்லா பிரச்சனைகளையும் விட வைஷ்ணவர்களுக்கு இருந்த மிகப்பெரும் பிரச்சனை சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனது.அவள் கற்பின் மீது சந்தேகப்பட்டு ராமன் பேசியது,அவள் தீக்குளித்தது ஆகும்.தாயின் கற்பின் மீது சர்ச்சை நடப்பதை,அதுவும் வைணவர்களின் கண்கண்ட கடவுளான ராமனே அம்மாதிரி செய்ததை வைஷ்ணவர்களால் தாங்கவே முடியவில்லை.

மேலும் சீதையை ராவணன் எப்படி தொடவிடலாம்?தாயை ஒருவன் தவறான எண்ணத்தில் தொட்டான் என்பதை ராமாயணம் எழுதிய வைஷ்ணவர்களால் தாங்கவே முடியவில்லை.

வால்மிகியின் மூல ராமாயணத்தில் இதை எப்படி சொல்லியிருக்கிறார் என பாருங்கள்.

வாமேன சீடாம் பட்மாக்ஸீம் மூர்தஜெஸு கரெண சக
ஊர்வொடு தஷீணென ஏவ பரிஜக்ராக பாணினா
டட தாம் பருஸை வாக்யை அப்கிடர்ஜ்ய மகாச்வன
அன்கென ஆதாய வைதேகீம் ரதம் ஆரோபயட் டடா

இடக்கரத்தால் தாமரைக் கண்ணினாளின் முடியையும் வலக்கரத்தால் அவள் காலையும் பற்றி அவளை இழுத்தான்.கொடுமொழிகள் பேசி அவளை மிரட்டியபடி தேரிலேற்றி கடத்திச்சென்றான்.(எனக்கே மனம் பொறாமல் வால்மிகியின் சிலவரிகளை சென்சார் செய்துவிட்டேன்)

இப்படி வால்மிகி எழுதிவைத்துவிட்டார்.பிற்காலத்தில் வந்த வைஷ்ணவர்களால் அதை தாங்க முடியவில்லை.ராமாயணம் பாடும்போது இந்த இடம் வரும்போது இதை எழுதவே அவர்களுக்கு மனம் வரவில்லை.பரமபாகவதனான கம்பன் இந்த இடத்தை எப்படி கையாள்கிறான் என்று பாருங்கள்.

ஆண்டு, ஆயிடை, தீயவன் ஆயிழையைத்
தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா;
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்,
கீண்டான் நிலம்; யோசனை கிழொடு மேல். 72

"ஆயிழையைத் தீண்டான்" என எழுதுகிறார் கம்பர்.சீதையை ராவணன் தொடுவதை அவர் விரும்பவே இல்லை.பர்ணசாலையை ஒரு யோசனை நிலத்தோடு சேர்த்துப் பெயர்த்து சீதையை தூக்கிக்கொண்டு போனான்,சீதையை தொடவில்லை என அழுத்தம் திருத்தமாக எழுதுகிறார்.

இவராவது பரவாயில்லை.இவருக்கு பின்வந்த வைஷ்ணவர்களால் சீதை ராவணன் வீட்டில் இருந்தாள் என்பதையே தாங்க முடியவில்லை.சீதையை ராமன் சந்தேகப்பட்டான் என எழுதவும் மனம் இடம்தரவில்லை.15ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆத்யாத்ம ராமாயணத்தில் ராமன் ஒரு மாயா சீதையை உருவாக்குகிறார்.ராவணன் வருவது அவருக்கு தெரிந்ததும் உண்மை சீதையை அக்னியிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கிறார்.நிழல் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போகிறான்.

பிறகு அவதார நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக ராமன் அழுவதுபோல் மாய விளையாட்டு காட்டுகிறார்.ராவணனை கொல்கிறார்.அக்னியை அழைத்து தன் மனைவியை திரும்பப்பெற்றுக்கொண்டு நிழல் சீதையை அக்னியிடம் சேர்க்கிறார்.

16ம் நூற்றாண்டில் துளசிதாசர் இந்த முறையையே கையாள்கிறார்.ஆத்யாத்ம ராமாயணம் சொல்வது போலவே இவரும் நிழல் சீதையை தான் ராவணன் கொண்டுபோனான் என எழுதுகிறார்.

வேதவதி என இன்னொரு பெண்ணைத்தான் ராவணன் கொண்டுபோனான் என சொல்லும் ராமாயணங்களும் உண்டு.சீதையை ராவணனின் மகளாக சொன்ன ராமாயணங்களும் உண்டு.தந்தை வீட்டில் மகள் இருப்பது தவறில்லை அல்லவா?

தாய் மீது வைஷ்ணவர்கள் கொண்ட பாசம் வால்மீகியை எடுத்து விழுங்கிவிட்டது.வால்மீகி எழுதியதை ஒப்புக்கொள்ள இவர்கள் யாரும் தயாராக இல்லை.

தாய்ப்பாசத்தின் சக்தி அப்படி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4