Thursday, April 06, 2006

சில்லென்று அழையேல் - அரவிந்த லோசனன்

சில்லென்று அழையேல்!

திருப்பாவை அனைத்தையும் எழுச்சி கீதங்கள் என்றால் அது மிகையல்ல. தூங்கும்
அனைத்தையும் அன்பாய், இதமாய் எழுப்பும் கீதங்கள் இவை. நாச்சியாரின் பரி
பக்குவம் இங்குதான் தெரிகிறது. வைணவ மரபில் அவள் திருவின் அவதாரமான
ஆதித்தாய். தாய் தன் குழவியை எழுப்பும் பாங்குடன் நல் வார்த்தை சொல்லி,
மெல்லமாக எழுப்புகிறாள் கோதைத்தாய். தூக்கிவாரிப் போடுமாறு எழுப்புவது
பீதியைத் தரவல்லது. அது எவ்விதத்திலும் நல்லதல்ல. அதனால்தான், தூங்கும்
சிறார் களை எல்லே, இளங்கிளியே! என்றும், செல்வச் சிறுமீர்காள் என்றும்,
மாமன் மகளே என்று முறை சொல்லியும், குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்
கொடியே என்றும், நந்தகோபனை - எம்பெருமான் நந்தகோபாலா என்றும், யசோதையை
எம்பெருமாட்டி என்றும், செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா என்றும்,
நப்பின்னையை கந்தம் கமழும் குழலீ! மைத்தடம் கண்ணினாய்! என்றும், நம்
கண்ணனை வெப்பம் கொடுக்கும் விமலா! கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குல
விளக்கே என்றும் குழையக் குழையச் சொல்கிறாள். வாசிக்கும்போதே இதமாக
இருக்கிறது.

பாவைப் பெண்டிர் என்பவர் யார்? "வையத்து வாழ்வீர்காள்" என்று கோடி
காட்டுகிறாள், ஆண்டாள்! பாவைப்பெண்டிர் நாம்தான்! சிறுவர், சிறுமியர்,
மாமன், மைத்துனன், செல்வப் பெண்டாட்டி, மணாளன், அப்பா,அம்மா என்று யாரை
விட்டாள் கோதை? ஒருவர் விடாமல் எல்லோரையும் இதமாக எழுப்புகிறாள்.

இந்த எழுச்சி எதற்காக? தூக்கத்திலிருந்து விழிக்கத்தான்! என்ன தூக்கம்?
அறியாமை என்ற தூக்கம்தான். பின்வரும் பாசுரத்தைப் படியுங்கள்.

எல்லே! இளம் கிளியே! இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின், நங்கையீர்! போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

(திருப்பாவை-15)

என்ன இன்னும் உறக்கம்? விழிக்க வில்லையா? கேட்டால் ஆயிரம்
காரணங்கள்[கட்டுக்கோப்பானபதில்கள்(கட்டுரைகள்)] சொல்லுவாய்! நீ வல்லீ
(பலமுடையவள்)! கொஞ்ச நேரமாவது என்னைப் போல் ஆகி நின்றால் என்ன? எல்லோரும்
விரைவாக (ஒல்லை நீ போதாய்) போங்கள். போய் எண்ணிக்கொள்ளுங்கள் - வல்லானை
கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனை! எம் பாவையரே!

இது வெளிப்படையான விளக்கம். இதுக்குப் போயா, திருப்பாவையை கோயிலில்
வைத்து கும்பிடவேண்டும்? வல்லானை கொல்பவன், மாற்றழிக்க வல்லவன் இவனைப்
போய் நாம் ஏன் கும்பிட வேண்டும்?இப்படித்தான் கேள்வி வரும், மேலோட்டமாக
ஆண்டாளைப் புரிந்து கொண்டால். ஆனால் இப்பாடல் முழுவதும் உருவகம்
நிரம்பியது.

தமிழ் மறை. மறைவான பொருள் கொண்டதால் மறை!

மானுடம் முழுதும் அறியாமை என்னும் துயிலில் (உறங்கிக்) கிடக்கிறது. தான்
யார் என்பது புரியாமல்,வெறும் சமூகம் தரும் பெயர், சாதி, பட்டம் இவைதான்
தான் என்று நம்பிக் கொண்டு, பட்டத்திற்காகவும், சாதிக்காகவும்,
பெயர்களுக்காகவும் வெட்டி சாய்த்துக் கொண்டு ஒரு மடமையான வாழ்வை நடத்திக்
கொண்டுள்ளது மானுடம். இதுதான் நம் அறியாமை.

இது தூக்கத்தை போன்று வலுவுள்ளது. யாருக்குத்தான் தூக்கத்திலிருந்து
விழிக்க மனம் வருகிறது? விழிப்பு என்பது மாறும் நிலை. மத, மதப்பு போய்
சுறு,சுறுப்பாய் இருக்க வேண்டிய நிலை. மாற்றங்கள் எப்போதும் வரவேற்கப்
படுவதில்லை. சாதீயத்தை எதிர்த்து ஆன்மீகம் எவ்வளவு முயன்றிருக்கிறது.
ஆதிக்க சக்திகள் இதற்கு அசையவில்லை. மானுடத்தின் 50% சதவிகிதமாய்
நிற்கும் பெண்ணின் விடுதலைக்காய் பாடிய கவிகள் எத்தனை. யாரும்
கிஞ்சித்தும் மாறுவதாகத் தெரியவில்லை. மனித நேயத்தை வலியுறுத்தி
சன்மார்க்க சங்கங்கள் எத்தனை தோன்றின மண்ணில். எதுவும் உறங்கும் மனிதனை
எழுப்ப சக்தியில்லாமல் இருக்கின்றன.

நம் உறக்கம் எத்தகையது? ஆண்டாள் வரியில், "ஊமையோ? அன்றிச் செவிடோ ?
அனந்தலோ (தூங்குமூஞ்சி), ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?"

அதுதான் நிலமை! மந்திரப் பட்டுப் போயிருக்கிறோம். மந்திரங்கள் என்னென்ன?

சமூகம் தரும் பெயர்கள். பிச்சை, மண்ணாங்கட்டி, கட்டாரி இவை மானிடப்
பெயர்கள். அவர்கள் அவ்வாறே நடத்தப்படுகிறார்கள். இந்த மந்திரத்தில்
இன்னும் கட்டுண்டுதான் கிடக்கிறது சமூகம்.

சாதி! பிறவியினால் இன்ன சாதி என்று சொல்லிவிடுகிறார்கள். மந்திரத்திற்கு
கட்டுண்டவர் போல் வாழ்நாள்பூராவும் அதையே நம்பிக் கொண்டு 97 கோடி மக்கள்!
பட்டங்கள், பதவிகள் கொடுத்து கெளரவிக்கிறார்கள். அப்பதவிக்காகவும் ,
பட்டத்திற்காகவும் கொலைகளும், ஊழலும் செய்து வாழ்கிறான் மனிதன். எத்தகைய
மந்திரம் இது! இதுதான் ஆண்டாள் சொல்லும் ஏமப் பெருந்துயில்.

இதிலிருந்து நமக்கு எழுச்சி வேண்டாமா? என்றாவது யோசித்தது உண்டா? தானாக
எழும்பாவிட்டால் யாராவது எழுப்பக் கூடாதா? கோதைத்தாய் அதைத்தான் இதமாய்
செய்கிறாள். பாசுரங்களை வாசியுங்கள்.

"எல்லே இளங்கிளியே" என்று தொடங்கும் பாடல் கவித்தன்மையாலும், பொருள்
வளத்தாலும் சிறந்து நிற்கிறது. இன்னும் உறங்குதையோ? சில்லென்று
அழையேன்மின்! என்கிறாள் கோதை. சில்லென்று அழைப்பது எப்படி?

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதிலே"
என்றான் மகாகவி பாரதி. தேன் வந்து "காதில்" பாய்ந்தால் இனிக்குமா என்ன?
"சில்லென்று" அழை என்கிறாள்ஆண்டாள்! தூக்கத்தை கலைக்க சில்லென்று தண்ணீர்
அடித்தால் தகும். ஆனால் இதத் தாயான கோதை, அந்த வருத்தத்தைக் கூடத்
தராமல், சில்லென்று அழைத்தால் போதுமென்கிறாள்.

வல்லையுன் கட்டுரைகள்! இதற்கு பல அர்த்தங்கள் தரலாம்! வல்லமையான
கட்டுரைகள். பதில்கள் என்று ஒருபொருள். வல்லை என்றால் காடு, கோட்டை
என்றும் பொருள் உண்டு. நாம் யார் என்பதைப் பற்றி ஒவ்வொருவரும் மிக
கட்டுக் கோப்பான, வலுவான எண்ணங்கள் கொண்டுள்ளோம்.அதையேதான் பேசுகிறோம்,
எழுதுகிறோம்.

கட்டுரைகள் என்பதை நாம் நம்மைப் பற்றி கொண்டுள்ள அறிவு என்றும்
கொள்ளலாம். வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாயறிதும்! இது
புதியவிஷயமல்ல. பண்டை நாள் தொட்டு மனிதன் இப்படித்தான் அடையாளம் தவறிப்
போய் உள்ளான் என்றும் பொருள் கொள்ளலாம்!

இது கல்வி என்ற நிறுவனத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். தற்போது பிரபலமாக
உள்ள மேலைக் கல்வி முறையில் "தான்" என்ற அடையாளத்தை குறித்துதான் அனைத்து
கல்வியும் உள்ளது. நடைமுறையிலுள்ள முதலாளித்துவ அமைப்பில் மனிதனது சுய
நலம் மிகவும் ஜாக்கிரதையுடன் பாதுகாக்கப்படுகிறது. பண்டைய இந்தியக்
கல்வியில் மனிதனது "உண்மையான அடையாளத்தை" தேடும் பாங்கு நிறைய இருந்தது.
மனிதனது உண்மையான அடையாளம் அவனது உறவுகளில் உள்ளது. தன்னுடன், தன்
சுற்றத்துடன், தன் சூழலுடன், தன்னுள் உறையும் இறைமையுடன் அவன் கொள்ளும்
உறவின் புரிதலில் உள்ளது அவனது உண்மையான அடையாளம். இதைத்தான்ஆண்டாள்
"விழித்துப் பார்" என்கிறாள். நம் வல்லமையான கட்டுரைகள் இதைப் பற்றி
இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இப்புரிதல் வரும் போது "தான்"
என்ற ஈகோ அழிந்து "நாம்" என்ற பன்மை உணர் வு வரும். எதிலும்,
எல்லாவற்றிலும் இறைமையைக் காணும் தெளிவு வரும். இதைத்தான்
கோதைத்தாய்,"வல்லீர்கள் நீங்களே, நானேதானாகிடுக!" என்கிறாள். இந்த "நான்"
பிரபஞ்ச ஒருமை! இதில் எல்லாம் அடங்குகிறது!

இதை அறிய விரையாயோ? என விரைவு படுத்துகிறாள். வல்லானைக் கொல்பவன் யார்?
வல்லான் யார்? இப்போது புரிந்திருக்கும், வல்லான் என்பவன் வேறு யாருமல்ல,
அது நம் மனம்தான் என்பது. இந்த வல்லானை வெல்லும் திறன் இறைவனுக்குத்தான்
உண்டு (இதையும் உருவகமாகக் கொள்க. இங்கு இறைவன் "புரிதலாக" நிற்கிறான்).
இவன் எப்பேர் பட்டவன்? மாற்றாரை மாற்றழிக்க வல்லவன்! தான்தான் தன்
பெயரும், சாதியும், பட்டமும், பதவியும் என்று இருக்கும் மாற்றானை
(அதாவது, நம்மை) மாற்றழிக்க வல்லவன்.

"வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்."

இவன் வல்லான், மாற்றழிக்க வல்லான் மற்றும் "மாயன்"! திருமாலுக்கு மாயோன்
என்பது பண்டையப் பெயர்."மாயோன் மேய காடுற உலகமும்" என்பது தொல்காப்பியம்.
உலகு உருவாகும் போது அதன் ஒரு அங்கமாக மாயையையும் வருகிறது.

இதை நவீன வாக்கில் சொல்ல வேண்டுமெனில் பரிணாமத்தில் வளர்ச்சி என்று
கணக்கிடப்படுவதே உயிர்களின் நரம்பியல் வளர்ச்சிதான். அது மனித
இனத்தில்தான் உச்சமுறுகிறது. நரம்பு "மண்டலமாகும்" (complexity) போது
தன்னிச்சையாக அது "தான்" (ஈகோ) என்ற உணர்வையும் மனிதனிடத்தில்
உருவாக்குகிறது. இந்த "தான்" க்கு இயற்பியல் ரீதியில் பொருள் பரிமாணம்
கிடையாது. இது மாயையான ஒன்று. இல்லாத ஒன்று இருப்பது போன்ற பிரமையைக்
கொடுக்கும். (யாராவது ஈகோவைக் கண்டதுண்டோ ?). பிறப்பில் உள்ள இந்த மாயையை
அறிந்து கொள்பவர்கள் இறைவனைக் கண்டு கொண்டதுபோல் ஆகும். இந்த மாயையைக்
களைய உதவுவதால் அவன் மாயன் ஆகிறான். மாயமாய் உருவானது மாயமாய் அறியப்
படுகிறது. இதைத்தான் மாணிக்கவாசகர் , "அவனருளால் அவன் தாள் வணங்கி"
என்கிறார். இந்தமாற்றத்தை நம்முள் கொண்டு வருபவன் அவனே. அது ஒரு மாயச்
செயல்தான்! அதனால் அவன் மாயன்!

இந்த மாயம் நடந்த பின், "உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை, பருகு நீர்"
இவைகூட கண்ணன் உருவமாய் தெரியும்! வெற்றிலையே கண்ணனாகத் தெரியும் போது சக
மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

எல்லே, இளங்கிளியே! என மதுரமாய் அழைக்கிறாள், மானுட மேன்மைக்கு!
விழித்தெழுவோம் தோழர்களே!



--
அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!

--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

Tuesday, April 04, 2006

குழல் இனிது யாழ் இனிது - இரவா

7.3 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.


தம் மக்களை தம் செல்வம் என்று போற்றுவர் பெற்றோர். அப்பெற்றோரது செல்வமாகிய மக்கள் , அவரவர் செய்த செயலால் வரும். அத்தகைய மக்கள், வினையின் பயனால் ஈட்டும் செல்வம் அவரவர் பெற்றோரும் இன்புற்றிட வாய்ப்புக் கிட்டும்.

அமிழ்தினும் ஆற்றல் இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

அமிழ்து சுவை மிகுந்ததே ஆயினும், அத்தனினும் மிகுந்த சுவையுடையது, தன் மக்களது சிறு கை அளாவி கூழான உணவு.

7.5 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.

பிள்ளைகள் உடலைப் பெற்றோர் தீண்டல் அது அவர்தம் உடலுக்கு இன்பம். பிள்ளைகளின் செற்களை கேட்டால் செவிக்கு இன்பம்.

நன்மக்களைப் பெற்றார்க்கு, உடல்வழியாகவும் செவிவழியாகவும் மனத்துக்கு இன்பத்தைத் தருவிப்பது, பிள்ளைப் பேற்றினால் பெறுகின்ற இன்பமாகும் .


7.6 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

பரதம் ஆடுதற்குரிய குழலின் ஓசையும் பண்ணிசைக்குரிய யாழின் ஓசையும் இனிய இசை என்று கூறுவர், குழவிப் பருவத்து மழலை பேசுகின்ற தம்மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர்கள் .


பரதத்துக்குக் குழலும் பண்ணுக்கு யாழும் இனிதென்பர். ஆக,அவ்விரண்டும் இணைந்து இசைக்கும் இசை இன்பம் பயக்குமென்பதால், அவ்விரண்டு இசையைவிடவும் இனியது மழலைச் சொல் என்றார்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.


தந்தை, கல்வி கேள்வியால் திறன்மிக்க தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மையாவது , கற்றோர்கள் அவையில் முதன்மை நிலையிலிருக்கும் அளவிற்குச் சிறந்த கல்விமானாக்குவதாகும்
.

'செல்வந்தனாவதை விடவும் சிறந்தது கல்விமானாவது' என்னும் கருத்து புலப்படுமாறு உரைக்கப்பட்டுள்ளது .

அன்புடன்
இரவா

"மௌனஒலி" - லாவண்யா

"Pin drop silence"
அமைதி அல்லது மௌனமான ஒரு இடத்தை,நிகழ்வைக் குறிக்கும் மேற்கோள் தானே மேலே சொன்னது. ஒரு குண்டூசியைத் தரையில் எறிந்தால் அதன் சப்தம் சற்று அமைதியான பகுதியில் காதில் கேட்கும் அளவில் இருக்கும். இது ஒரு சாத்தியமான விசயம். ஆனால் இதை விட ஆழமான கொடூரமான மௌனத்தை பற்றிய சங்க கால கவிதை ஒன்று உள்ளது.

கொன்னுர் துயிலினும் யாந்துங் சலமே
எம்இல் அயல ஏழில் உம்பர்
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.


உரை:
---

இந்த பெரிய ஊர் தூங்கிய பிறகும் நாங்கள் தூங்கவில்லை. எங்கள் வீட்டின் அருகே ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள மயிற் பாதம் போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த நீலமணி போன்ற மலர்களின் ஒலியைக் கேட்டபடி இரவெல்லாம் படுத்திருந்தோம்.

நன்றி ஜெயமோகன் "சங்கச் சித்திரங்கள்"


இந்த சங்க பாடல் ஒரு உக்கிரமான மௌனத்தை பேசுகிறது. ஊர் உறங்கிவிட்ட வேளை. தூங்க முடியாத இருவர், சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்திலிருந்து உதிரும் பூ ஒன்றின் ஒலியை கேட்டுக் கொண்டு இரவெல்லாம் தூங்காது இருப்பதாக வருகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு ஆழமான சோகம் போல தெரிந்தாலும் உற்று கவனித்தால், இலைகளை மயிற்பாதங்களுக்கு ஒப்பிட்ட கவிஞன் பெரிய பூங்கொத்துகளை நினைவில் கொணரும் கவிஞன் உதிரும் பூ நீலமணி போலிருக்கும் என்று நினைவு கூரும் கவிஞன் சோகமாக இருக்க
வாய்பில்லை என்றும் கொள்ளலாம். மலர் உதிரும் ஒலியை கேட்பது சாத்தியமா என்ற வாதத்தை விடுத்து உறங்காமல் தவிக்கும் அந்த இருவர் பற்றி சிந்தித்தேன். என் சிந்தனையில் வந்து போனது இந்த நான்கு விதமான உறவுகளாகும்.

நட்பு
--------

நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சண்டை என கொள்வோம். சண்டை முடிந்திருக்கும் ஆனால் அதன் சாரம் போகாதிருக்கும்.நீ என்ன அவ்வளவு பெரியவனா என்ற எண்ணம் இருவருக்கும் இருக்கும். ஆனால் நட்பும் மேலோங்கி நிற்கும். பேச முடியாது. ஒரே அறையில் இருவரும் அடுத்தவன் வந்து பேசுவான் என்ற நினைப்போடு உறங்காமல் படுத்து இருப்பார்கள்.

நீண்ட நாட்களுக்கு பின் கூடிய பழைய நண்பர்கள் இருவர். நிறைய பேசி மகிழ்ந்து,பிரிந்து செல்ல வேண்டிய நாளின் முதல் நாள் இரவு. மிக சந்தோசமான மனநிலையில் நாம் இருக்கும் போது ஒரு சில பயணங்கள் முடியக் கூடாது என்று நினைப்போம். அதுபோல் அந்த இரவு முடிவே இல்லாமல் நீளக்கூடாதா என ஏங்கியவாறு தாங்கள் மகிழ்ந்து களித்த நாட்களை ினைத்தபடி கண்மூடி உறங்காது படுத்திருப்பர்"

தாய் மகள்
----------
மகளை திருமணம் முடித்து கொடுத்த பெற்றோர் அவளை காண அவள் வீடு வந்திருக்கின்றனர். திருமணம் மற்றும் தலை தீபாவளி, பொங்கல், ஆடி இப்படி பல பண்டிகைக்கு தரப்பட்ட சீர் சரியில்லை என்கிற சண்டை. வீடு தேடி வந்த பெற்றோரை அவமான செய்த கணவனையும் கணவர் வீட்டாரையும் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத பெண், தன் மகளை இப்படி பட்ட பேய்களிடையே விட்டு விட்டோமே என்று தாய், அவர்களும் ஒரே வீட்டில் ஒர் இரவில் உறங்காது இருப்பார்கள் அப்போது மலர் உதிரும் ஒலி என்ன கண்ணில் இருந்து கன்னங்களில் கண்ணீர் வழியும் ஒலியைக் கூட கேட்க முடியும்.

கணவன் மனைவி
----------------

இந்த உறவில் மலர் உதிரும் ஒலியை கேட்டுக்கொண்டே ஒருவரோடு ஒருவர் பேசமல் படுத்திருப்பார்கள் என்றால் அதைவிட கொடுமை உலகில் வேறொன்றும் இருக்க முடியாது. ஆனால் இந்தக் கவிதைக்கு இந்த உறவை வைத்து நான் சிந்தித்தது வேறு விதமாகும்.

"நான் கேட்கும்
எந்த ஒரு கேள்விக்கும்
உடன் பதில் வைத்திருகிறாய்
அழகாய், அது
உன் மௌனம். " - நன்றி நிலா ரசிகன்

இந்த கவி வரிகளில் ஒரு ஏக்கமில்லை, ஒரு சாடல் இல்லை. இதில் ஒரு சந்தோசம் தான் தெரிகிறது. என் மௌனம் சொல்லாத எதையும் என் வார்த்தைகள் சொல்ல போவது இல்லை என்ற புரிதல்(understanding) கணவன் மனைவிக்குள் இருந்தால், இருவரும் "மயிற் பாதம் போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த நீலமணி போன்ற மலர்களின் ஒலியைக் கேட்டபடி இரவெல்லாம் படுத்திருந்தோம்" என படுத்திருக்கலாம்.

காதலன் காதலி
--------------

காதலிக்கும் சமயம் இருவரும் வேறு வேறு வீடுகளில் தான் இருப்பார்கள். ஆயினும் சிந்தனை ஒரே புள்ளியில்தான் இருக்கும். ஒருவேளை கற்பனையில் அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின்
இருந்து உதிரும் நீலமணி மலர்களின் ஒலியைக் கேட்டபடி இருவரும் அவர் அவர் வீட்டில் உறங்காமல் படுத்து இருப்பர். கற்பனையில் மட்டுமே
மலர் உதிரும் ஒலியை காதில் கேட்க முடியும்.

Monday, April 03, 2006

அர்த்தமுள்ள இந்துமதம்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் சுதனின் விஜி எழுதிய கட்டுரை

மெளனம்

காற்றுக்கு இலைகள் அசைகின்றன; மலர்கள் அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன; ஆனால் மலைகள் அசைவதில்லை!

அசைவது பலவீனத்தைக் காட்டுகின்றது. அசையாதது உறுதியைக் காட்டுகிறது.

சளசளவென்று பேசுகிறவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும், சொற்பொழிவாளனாக இருந்தாலும், தன் பலவீனத்தைக்காட்டிக்கொள்கின்றான்.

மெளனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக் காணப்படுகிறான்.

"சும்மா இருப்பதே சுகம்" என்றார்கள்.

பேசாமல் இருப்பதே பெரும் திறமை. பேசும் திறமையைவிட அது மிகப் பெரியது. அதனால் தான் ஞானிகளூம் பெரிய மேதைகளூம் குறிப்பிட்ட சில காலங்களில் மெளனவிரதம் அனுஷ்டிக்கின்றார்கள்.

ஒன்றைச் சொல்ல வேண்டுமென்று விரும்பி அதைச்சுருக்கமாக தெளிவு படுத்துகிறவன் பெரிய மரியாதையைப் பெற்று விடுகிறான்.

சிறிய விசயத்தைக் கூட வளைத்து வளைத்துப் பேசுகிறவன் கேலிக்கு ஆளாகிறான்.

பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை, "மக்கட்பதடி" என்றான் வள்ளுவன்.

'சுருங்கக் கூறி விளங்க வைத்தல்" என்பார்கள்.

ஞானிகள் சில விசயங்களைக் கூறுகிறார்கள். அவை பொன்மொழிகளாகி விடுகின்றன.

பைத்தியக்காரர்கள் பதினாயிரம் பேசுகிறார்கள். அவை சீந்துவாரில்லாமல் போகின்றன.

மெளனம் ஒரு மகத்தான ஞானம். அது தெய்வீகக் கலை.

ஒரு குடும்பம். கணவன் -மனைவி இருவர். கணவனுக்கு மனைவியிடம் கோபம். ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை. மனைவியிடம் பேசாமலேயே இருக்கிறான். அவன் அவளைத்திட்டி இருந்தால். அது சாதாரணமாகவே போயிருக்கும். அவன் பேசாமல் இருப்பதே சித்திரவதை செய்கிறது.

"அவன் பேசமாட்டானா? பேசமாட்டானா?" என்று எதிர் பார்க்கிறாள். இரவில் நிச்சயமாய் பேசுவான் என்று நம்புகிறாள். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறாள்.

"நான் என்ன தப்பு பண்ணினேன்? " என்று மெதுவாகக்கேட்கிறாள்.

நள்ளிரவில் பக்கத்தில் வந்து உட்காருகிறாள். காலைப்பிடித்து விடுகிறாள். அவன் மெளனம் கலையவில்லை. அவன் மெளனம் தொடரத் தொடர, அவள் தாகம் அதிகரிக்கிறது.

திடீரென்று ஒரு வார்த்தை அவன் பேசி விட்டான்.
அவளுக்குத் தெய்வமே கண் திறந்தது போன்று தோன்றுகிறது!

"இன்றைக்கு நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம் என்று ஊர் முழுக்கச் சொல்லிக்கொண்டு வந்து விடுகிறாள்'..

பத்து வார்த்தை திட்டி நாலு வார்த்தை உதைப்பதை விட அந்த மெளனம் மகத்தான சக்தியைப் பெற்று விடுகிறது.

கோவிலில் இருக்கின்ற சிலை, வருகின்ற பக்தனிடம் எல்லாம் பேசத்தொடங்குமானால், பக்தனுக்கே அலுப்புத்தட்டி விடும்.

கோவிலுக்குப் போனால் அந்தச் சாமி நம்மை விடாதய்யா! உயிரை வாங்கி விடும்" என்று பேசத்தலைப்பட்டு விடுவான்.

அது மெளனமாக இருக்க, பக்தன் தான் பேசுகிறான்,பாடுகிறான்., புலம்புகிறான்.

ஆரவாரங்கள் வெறும் மயக்கங்கள்.

அரசியல்வாதியின் கூச்சல், வேறு வேலை இல்லாதவனின் புலம்பல்.

தொண்டைத் தண்ணீரைக் காய வைப்பதில் என்ன இலாபம்?

'இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?' என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.

பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.

கடலின் ஆழமான பகுதிய்ல் அலை இருக்காது.

வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப்பாருங்கள் பயங்கரக்காற்று அடிக்கும்.

வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட கார் மேகத்தின் வேகம் குறைவு.

நாய் ஓடுவதை விட யானை நடப்பதில், வேகம் அதிகம்.

சலனமற்ற மெளனம் பல அர்த்தங்களைக் கொண்டது.

பேசாமல் இருப்பவனே பெரிய விஷயத்தைச் சொல்பவன், பேசிக்கொண்டிருப்பவன் ஞானக்கிறுக்கன்.

ஆரோக்கியத்திற்கு மெளனம் மிக அவசியம்.

தவம் புரிகின்றவன் 'ஓம் நமசிவாய" என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை"..

மெளனமாக இருப்பவனுக்கு ஆகாரம் குறைவாக இருந்தால் கூட போதும்.

தொடரும்...

நன்றி...

அர்த்தமுள்ள இந்துமதம் -கவிஞர் கண்ணதாசன் அவர்கள்..

--
என்றென்றும் நட்புடன்
+நம்பிக்கையுடன்
உங்கள் சுதனின்விஜி


--~--~---------~--~----~------------~-------~--~----~
நம்பிக்கை கொள்!
தயக்கம் தகர் !!
வெற்றி நிச்சயம் !!!
-~----------~----~----~----~------~----~------~--~---

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4