Friday, April 14, 2006

ராஜ்குமார் மரணம் ஏற்படுத்திய சலனம்- விழியன்

மரணம் ஏற்படுத்திய சலனம்

கன்னட சினிமாவின் ஒர் சகாப்தமாக கருதப்படும் ராஜ்குமார் நேற்று பெங்களூரில் இறந்தார். தமிழகத்திற்கு எம்ஜியார், ஆந்திரத்திற்கு ஒரு என்.டி.ஆர், கன்னடத்திற்கு ஒரு ராஜ்குமார். மற்ற இருவரைக் காட்டிலும் இவருக்கு ஒரு பெருமை என்னவென்றால் இவர் அரசியலில் இறங்கவில்லை. எத்தனை சந்தர்ப்பம் வாய்த்தபோதும் தன்னை அரசியலில் இணைத்துக்கொள்ளவில்லை.

அலுவலகத்தில் மிக பரபரப்பான வேலையின் நடுவே இந்த செய்தி அச்சத்தை ஏற்படுத்தியது. காரணம் ஏற்கனவே ராஜ்குமார் 2001ல் கடத்தப்பட்ட போது எழுந்த கலவரம் தான் நினைவிற்கு வந்தது.அனைவரும் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். நானும் எனது சக ஊழியரும் சரி சீக்கிரம் கிளம்ப ஒரு நல்ல சந்தர்ப்பம்,விரைவாக சென்று நான் படிக்கும் புத்தகத்தை முடிக்கலாம், சின்ன சிறுகதை எண்ணத்தில் இருந்தது, அதையும் முடித்துவிடலாம் என்று கிளம்பினோம். அலுவலக வாசலை அடையும் போது எதிர் வரிசையில் இருந்த கடைகள் அடைக்க சொல்லி பெரும் கும்பல் கூடி இருந்தது. கைவசம் கேமரா வைத்திருந்தேன். ஏதாவது நடந்தால் புகைப்படம் எடுக்கலாம் என்ற ஒரு குருட்டு ஆசை. விபரீத ஆசை தான்.
வழி நெடுகிலும் கர்னாடக கொடி ஏந்தி மக்கள். என்னுடன் வந்த சக ஊழியனுக்கு அடுத்த மாதம் திருமணம், அதனால் அதை பற்றி பேசிவந்தோம்.அதிக அவனோடு பேசியதில்லை. தனக்கு இருக்கு தமிழ் நண்பன் நான் ஒருவனே என்றான். கால்மணி நேரம் இனிமையாக பேசிக்கொண்டு சென்றோம். தூரத்தில் புகைவந்தது. என்ன அது என்று பார்த்தால் ஒரு பைக் எரிந்து கொண்டிருந்தது. திடீர் என்று பயம் தொற்றிக்கொண்டது. எதிரே ஒரு பேருந்து, ஒரு கார், சில வாகனங்கள். எதுவும் அசையாமல் நின்றது.
காரின் முன்னால் ஒரு மிருகம், ஆம் மனித முகம் போர்த்திய மிருகம் கையில் உருட்டுக்கட்டையுடன் காரை நோக்கி வந்தான். காரின் கண்ணாடியை உடைக்க ஓடி வந்தான். அந்த கண்களில் இருந்த வெறி. அய்யகோ. அது அந்த நடிகன் மீது வைத்திருந்த பற்றா? இருக்கவே இருக்காது. என் கண்களை தற்போது மூடினாலும் அந்த வெறி என்னை உலுக்கிவிடுகின்றது. அந்த நொடி என் வண்டியை நான் தான் செலுத்தினேனா என்று கூட தெரியவில்லை.பக்கத்தில் இருந்த சந்தில் திரும்பி வேறு வழியாக தப்பியோட வேண்டியதாகிவிட்டது வண்டியுடன். பத்திரமாக வீடு சேர்ந்தேன். எந்த காரியமும் செய்ய முடியவில்லை. புத்தகம் திறந்தால் அதே கண்கள், பேனா எடுத்தால் மை ரத்தமாக வருவது போன்ற உணர்வு. என்ன கொடூர பார்வை அது.

பையில் கேமரா இருந்தும் பிடிக்கவில்லை
கண்ணின் கேமரா வழியாக பிடித்துவிட்டேன்
தவிற்கவேண்டிய கண்களை.
யார் வருவார்கள் இவர்களை மனிதர்களாக்க?

இரவு, எங்கும் உணவு கிடைக்கவில்லை. சுமார் 3-4 கீமீட்டர் நடந்தே தேடினோம். எங்கும் கும்பல் கும்பலாக. யாராவது ஔஅருகே வந்தால் "ராஜ்குமாருக்கு ஜே" என்று செல்லலாம் என்று பேசிவைத்தோம். கடைசியாக ஒரு தமிழ் ஓட்டல் திறந்து வைத்திருந்தனர்.

மறுநாள் காலையாவது நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்தால், இன்னும் மோசமாகிவிட்டது. அலுவலக திறக்கவில்லை. விடுமுறை என்று அறிவிப்பு. ஊருக்கு செல்லலாம் என்றால் பேருந்து இயங்கவில்லை. இரவு 11 மணிக்கு தான் பேருந்தில் சென்னை செல்ல முன்பதிவு செய்து இருந்தேன். அந்த ட்ரேவல்சுக்கு காலை முதல் தொலைபேசியில் அழைத்துக்கொண்ருந்தேன். மதியம் 2 மணிக்கு சொல்கிறார். இன்று எந்த பேருந்தும் இல்லை என்று.. " பயணம் பயமாகி போனது"

இதன் நடுவே ஊருக்கு பயணிக்கு நண்பன் அலைபேசியில் அழைத்து. "மச்சி நிற்க கூட இடம் இல்லை புகைவண்டியில். இந்த வெயிலில் கதவை வேறு மூடிவிட்டனர். கல் எறிகின்றனராம்" என்றான்.

அலுவலம் அருகே பல டிராவல்ஸ் இருக்கு, எப்படியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்துவிட்டேன். வழியில் ஏகப்பட்ட கண்ணாடி உடைப்பு, என் அலுவலகத்திலும் 5 இடத்தில் உடைத்துள்ளனர் புண்ணியவான்கள். உணவகம் ஏதுமில்லாமல் ஒரு நாள் முழுக்க ரொட்டியில் வாழ்கை நடத்துகின்றனர் மக்கள். எந்த கடையும் திறக்கவில்லை. எப்போது நெரிசலாக இருக்கும் பெங்களூர், வெரிச்சோடி கிடந்தது.போலீசுக்கும் மக்களுக்கு இடையே நடந்த போராட்டத்தில் 5 இறந்ததாக தகவல். மதியம் தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. கையில் சிக்கிய போலீஸ்காரரை நார்நாராக கிழித்துவிட்டனர். தர்ம அடி.பாவம்

ஒரு வழியாக கே.பி,என் டிராவஸ்சில் இரண்டு சீட் கிடைத்துள்ளது. மிருகர்கள் எந்த பிரச்சனையும் செய்யாமல் இருந்தால் சென்னைக்கு பத்திரமாக செல்வேன்.

இந்நேரம் அந்த நடிகரின் உடல்தகனம் செய்யப்பட்டு இருக்கும். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். ஆனால் அமைதியை விரும்பிய அவரின் ஆத்மா, ரசிகர்களின் வெறியாட்டத்தை கண்டு நிச்சயம் எங்காவது அழுதுகொண்டிருக்கும்.

--
விழியன்
http://vizhiyan.wordpress.com

Tuesday, April 11, 2006

கண்ணதாசனின் தமிழ்ப் பற்று - இரவா-கபிலன்

காஞ்சி சங்கர மடத்தின்
'தமிழ் மன்றம் ' நடத்திய
'கவிதைப் போட்டியில் (1984) பரிசு பெற்ற கவிதை.
"கண்ணதாசனின் தமிழ்ப் பற்று"


எழுதிவிற்ற இலக்கியத்தை கண்ண தாசன்

எங்களுக்குக் கொண்டுவந்த அஞ்சற் காரன் !

தொழுதுஉற்ற ரகசியத்தின் கரத்தி லாடும்

தொகைப்பாட்டுத் தொட்டிலிலே தூங்க வந்தான்!

பழுதுஅற்ற தமிழ்க்கன்னி இதழின் மின்னல்

பைந்தமிழின் கவிதைகளே அவனின் வாழ்வு!

அழுதுஉற்ற சோகமெல்லாம் அவனின் பாட்டின்
அமுதுதரும் சுரபிசுனை மூழ்கி மாளும்!

தென்றலிலே தமிழ்கரைத்தான் கண்ண தாசன்


தீச்சுடரின் கவிதைக்குள் நெய்யும் வார்த்தான்!

மன்றங்கள் மாடங்கள் மாசி யெங்கும்

மதுவூற்றித் தமிழ்ப்பாட்டுத் தீயை வைத்தான்!

இன்றெங்கள் இலக்கியத்தின் வாயில் முன்னே

இனிதான புன்னகையை வீசு கின்றான்!

கன்றுக்கும் தாய்மைக்கும் உறவைப் போலோ
கண்ணனுக்கும் தமிழுக்கும் உறவாய் ஆனான்!

காடுகளில் சுற்றிவரும் பாதை போலே!

கடலோடிச் செல்கைகின்ற தோணி போலே!

மாடுகளை ஓட்டுகின்ற சாட்டை போலே!

மாந்தரையும் வாழுவிக்கும் அன்னம் போலே!

நாடுபல சுற்றிடினும் தமிழைப் போலே


நலமான மொழிஅவனும் கண்ட தில்லை!

பாடுபெற வலுவேற்றும் தமிழைத் தேனைப்
பருகவைத்த மருத்துவன்தான் கண்ண தாசன்!

நற்றமிழின் நாடியெல்லாம் அறிந்தி ருந்தான்!

நாடெங்கும் இசைப்பாட்டு வேந்தன் ஆனான்!

உற்றமிழின் புதல்வனாய் எழுந்து நின்றான்!

உய்கடலும் அவன்பாட்டைக் கேட்டே ஆடும்!

சொற்றமிழின் வளமைக்குள் சொல்லைப் பாய்ச்சிச்


சொக்கட்டான் சூதாட்டம் ஆடிப் பார்த்தான்!

வெற்றிதரும் மா தமிழால் கண்ண தாசன்
வீறுகொண்ட மாணிக்க விளைச்சல் ஆனான்!

போர்ப்பாட்டுத் தமிழாலே தாலோ பாடி


புரியாத மொழியெல்லாம் புரிய வைக்கும்

நேர்ப்பாட்டை அறநூலைப் போலே வாழ்ந்து

நீர்க்கடலின் மணிபோன்று தமிழில் தேர்ந்தான்!

கார்பாட்டை கதிர்பாட்டை கண்ணன் பாட்டை

கவிகொஞ்சும் சீர்பாட்டை சமயப் பாட்டை

போர்கோட்டை இலக்கியமாய் எழுதி வைத்தான்
பூசித்தாள் தமிழ்த்தாயும் அவனைத் தானே!

காற்றுக்கும் மின்னலுக்கும் கரைந்து போகா


கவிமலையின் அரணாகும் தமிழில் வாழ்தல்

ஆற்றுக்கும் நாற்றுக்கும் அன்னை ஆகும்

அருவிகளில் தூங்கிடலாம்! என்றோ, எண்ணி

காற்றுக்கும் தன்பாட்டுத் தேரைத் தந்தான்!

கற்கோட்டை கவிகோட்டை கட்டிக் கொண்டான்!

மாற்றங்கள் வானத்தில் வையம் எங்கும்
வந்தாலும் அவன்புகழைத் தமிழே சொல்லும்!

கட்டிப்பொன் என்பாரே கவியின் சொல்லை,

கண்ணாடி மணிபோலே மயக்குஞ் சொல்லை,

மட்டிப்பால் வாசனையாய் மணக்குஞ் சொல்லை,

மாளிகையின் வாசத்தின் மதப்புச் சொலை,

கொட்டித்தான் வைத்தானே கவிதைக் குள்ளே!

குடிக்கத்தான் செய்தானே தமிழின் கள்ளை!

பட்டுக்குள் வைக்கின்ற வைரம் தன்னைப்

பாட்டுக்குள் வைத்தானை வணங்கு கின்றேன்.

இவண்

இரவா-கபிலன்.

Monday, April 10, 2006

குப்பை-விழியன்

குப்பை

வீட்டின் குப்பைகள்
வெளியில் போக
சிகரெட் துண்டுகள் வீசப்பட
காப்பிக்கோப்பைகளும்
பேருந்து சீட்டுகளும்்
நசுக்கி எறியப் பட

ஊரெங்கும் குப்பை.
குப்பைத் தொட்டிகள் தவிற

குப்பைகளை தின்ன
காத்திருக்கும் தெருவோர
மாடுகளும், நாய்களும், கழுதைகளும்
அவற்றுடன் போட்டிப்போடும்
சில மனிதர்களும்
குப்பைக் காகிதத்தை விற்று பிழைக்கும் சிறார்களும்

தூரத்து மேடையில்
புறக்குப்பையை சுத்தம் செய்கிறோமென
அகத்தினில் ஆயிரம் குப்பையோடு
பிரசங்கம் செய்யும் அரசியல் வாதிகள்.
இவற்றில் எது குப்பை என புரியாமல்
விழிக்கும் நான்

(மஞ்சூர் ராசாவின் செதுக்கலுக்கு பின்னர் வந்த கவிதை. நன்றி - மஞ்சூர் அண்ணா)

-விழியன்

Sunday, April 09, 2006

அம்மா தான் பிரதமர் - அன்பு செல்வன்

2011 தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அம்மா மத்தியில் ஆட்சி அமைக்கிறார்.வென்றதும் ஆலோசனை கூட்டம் கூடுகிறது.

பிரதமராக அம்மாவை தேர்ந்தெடுக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறுகிறது.அடுத்ததாக மந்திரிகளாக யாரை நியமிக்கலாம் என ஆலோசனை நடக்கிறது.(ஆலோசனை எல்லாம் கிடையாது.அம்மா அறிவிக்கிறார் அவ்வளவுதான்)

"பாதுகாப்பு துறை அமைச்சர் எஸ்.எஸ் சந்திரன்" என்கிறார் அம்மா.

தடால் என்று ஒரு எம்.எல்.ஏ அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுகிறார்.அவரை தூக்கிக்கொண்டு போகிறார்கள் சிலர்.ஓ.பி.எஸ் மட்டும் நெளிகிறார்.

"ஏம்மா..இவருக்கு என்ன தகுதி இருக்குன்னு..." என்று இழுக்கிறார்.

"என்னையா ஒளர்ரீங்க?மந்திரியாறதுக்கு பெருசா தகுதி என்ன வேண்டிகிடக்கு?அடிமடியில கைவெச்சுடுவீங்க போலிருக்கு" என ஒரு எம்.எல்.ஏ முணுமுணுக்கிறார்.

"எஸ்.எஸ் இங்க வாங்க" என அம்மா அழைக்க ஓடோடி வருகிறார் எஸ்.எஸ்.

"பாதுகாப்பு மந்திரியாவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று சொல்லுங்கள்" என்கிறார் அம்மா.

"எனக்கு ஒரு தகுதியும் கிடையாது.இது நீங்கள் போட்ட பிச்சை" என்கிறார் எஸ்.எஸ்.பட படவென்று அனைவரும் மேஜையை தட்டுகின்றனர்.

"முஷாரப் வாலாட்டுனா என்ன பண்ணுவீங்க? என கேட்கிறார் அம்மா.

"அடேய் முஷாராப்.வேணாண்டா.அம்மா கிட்ட வம்பு வெச்சுகாதே.ஊடு கட்டி அடிப்பேன்.கால் முட்டிய பேத்து,யூனிபாரத்தை கழட்டி பஞ்சை பராரியா உன்னை லாகூர்ல ஓட வைப்பேன்." என கர்ஜிக்கிறார் எஸ்.எஸ் சந்திரன்.

"இப்படி தைரியமா பேசற எந்த பாதுகாப்பு துறை மந்திரியாவது நீங்க பாத்திருக்கிங்களா?" என கேட்கிறார் அம்மா."இல்லை" என தலையசைக்கிறார் பன்னீர்.அனைவரும் எஸ்.எஸ் சந்திரனை ஏற்று கைதட்டுகின்றனர்.

"நிதி மந்திரி செந்தில்" என அடுத்து அறிவிக்கிறார் அம்மா.

தொப் தொப் என இரண்டு மூன்று எம்.எல்.ஏக்கள் மயங்கி விழுகின்றனர்.பன்னீருக்கு தலை சுற்றி மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது.

செந்தில் எனும் பெயரில் வேறு யாராவது எம்.எல்.ஏ இருக்கிறாரா என பார்க்கிறார் பன்னீர்.யார் யார் அதிமுகவில் எம் எல் ஏ என யாருக்கும் தெரியாதே?ஆனால் அம்மா சொன்னது நடிகர் செந்திலைத் தான் என்பது தெரிந்ததும் பன்னீர் அதிர்ச்சி அடைகிறார்.

"ஏம்மா,,இவருக்கு வாழைபழ கணக்கு கூட தெரியாதே.இவரை நிதி அமைச்சரா ஆக்குனா உலகம் பூரா சிரிக்குமே?உலக வங்கி தலைவர் கிட்ட ஒரு வார்த்தை இவரால பேச முடியுமா?ஐ.எம்.எப் எங்க இருக்குன்னு இவருக்கு தெரியுமா?காண்டலினா ரைஸ் கிட்ட இவர் என்னன்னு பேசுவார்?ஆலன் கிரின்ஸ்பேன் யாருன்னாவது இவருக்கு தெரியுமா? " என அதிர்ச்சியுடன் வினவுகிறார் பன்னீர்.

"இதெல்லாம் தெரியாத ஆளா இருக்கணும்னு தான் அமெரிக்கா காரன் கேட்டான்.எப்படியும் நம்ம பட்ஜெட்டை முடிவுபண்றது அமெரிக்கா காரன் தான்.அவன் எழுதின பட்ஜெட்டுல கையெழுத்து போட ஒரு ஆள் வேணும்.உலக வங்கி தலைவர் கிட்ட பேச என்ன இருக்கு?அவர் நீட்டுற வெள்ளை பத்திரத்துல கையெழுத்து போட்டா பத்தாதா?அவர் என்ன சொன்னாலும் தலை ஆட்டிகிட்டு சிரிச்சா போதாதா?அதுக்கு ஆர்வேர்ட்ல படிச்ச ஆள் தான் வேணுமா?" என அம்மா வினவுகிறார்.

"உண்மை அம்மா,உண்மை " என பன்னிர் ஒத்துக்கொள்கிறார்.
"குடும்ப நலத்துறை அமைச்சர் கா.காளிமுத்து" என அம்மா அறிவிக்கிறார்."அவருக்கு ரெண்டு சம்சாரமாச்சே" என யாரோ முணுமுணுக்கிறார்கள்.'யோவ் சும்மா கிட" என இன்னொருவர் அதட்ட அவர் பேசாமல் இருக்கிறார்.

கால்நடைத்துறை அமைச்சராக ராமராஜன் அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் கைதட்டுகிறார்கள்.பகுத்தறிவுத்துறை என புதிதாக ஒரு துறை ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைவராக மதுரை ஆதினம் நியமிக்கப்படுகிறார்.

மந்திரிகளின் பட்டியலை அப்துல்கலாமிடம் கொண்டு போய் தருகிறார்கள்.அந்த பட்டியலை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து "இந்தியா 2020" என்பதை "இந்தியா infinity" என மாற்றி விட்டதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

புன்னகை உங்கள் அணிகலன் மஞ்சூர் ராசா

அந்த சோபாவில் அமர்ந்திருக்கும் பெரியவருக்கு சுமார் எண்பது வயதிருக்கும், அவருக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் அவர் மகனுக்கு சுமார் நாற்பத்தைந்து வயது இருக்கும். உயர்ந்தப் படிப்பு படித்திருக்கிறார் என்பதை அவர் முகம் காட்டுகிறது.

அப்பொழுது ஒரு காகம் பறந்து வந்து ஜன்னல் கதவில் அமர்கிறது.

தந்தை மகனைப் பார்த்து "என்ன சததம்?"

மகன் : "அது ஒரு காகம் ஜன்னல் கதவில்"

சில நிமிடங்களுக்கும் பிறகு தந்தை மீண்டும் மகனைப் பார்த்து "என்ன சத்தம்"

"அப்பா, நான் இப்பத்தானே சொன்னேன் அது காகம் என்று "

சிறிது நேரம் கழிந்தது. வயதான அந்த தந்தை மறுபடியும் மகனைப் பார்த்து "என்ன சத்தம் அது ?" என்று கேட்டார்

இப்பொழுது மகன் எரிச்சலடைந்த குரலில் "அது காகம், காகம்" என்று சத்தமாக கூறினார்.

இன்னும் சிறிது நேரம் கழிந்தது. தந்தை நான்காவது முறையாக தன் மகனை நோக்கி "என்ன சத்தம் அது" எனக் கேட்டார்

இப்பொழுது பொறுமையிழந்த மகன் சத்தமாக எதுக்காக கேட்டக் கேள்வியையே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள்? நான் தான் பலமுறை சொன்னேனே அது காகம்ன்னு. உங்களுக்கு இதுகூட புரியலையா?"

கொஞ்ச நேரம் கழிந்தது. தந்தை மெதுவாக சோபாவிலிருந்து எழுந்து தனது அறைக்கு போய் ஒரு பழைய நைந்து போன டைரியை கொண்டு வந்தார். அந்த டைரியை அவர் தன் மகன் பிறந்த நாளிலிருந்து பாதுகாத்து வருகிறார். அதை புரட்டி ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எடுத்து மகனுக்கு கொடுத்து படிக்க சொன்னார்.

அந்த டைரியில் எழுதியிருந்த வாசகங்கள் வருமாறு:

"இன்று காலையில் என் மூன்று வயது மகன் சோபாவில் என் அருகில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு காகம் வந்து ஜன்னலில் அமர்ந்தது. அதைப் பார்த்த என் மகன் சுமார் இருபத்தி மூன்று தடவை அது என்ன என்று திரும்ப திரும்பக் கேட்டான். நானும் அவன் கேட்கும்போதெல்லாம் அது காகம் என்று சொன்னேன். ஒவ்வொரு முறையும் ஒரே கேள்வியை அவன் கேட்கும் போது நான் அவனை கட்டி அணைத்தப்படி அவனுடைய கேள்விக்கு இருப்பத்தி மூன்று முறையும் பதில் சொன்னேன். பலமுறை அவன் கேட்டும் எனக்கு சிறிதளவேனும் அவன் மீது கோபமோ, எரிச்சலோ உண்டாகவில்லை அதற்கு பதில் அந்த அப்பாவி குழந்தையின் மீது அன்பும் பாசமும் தான் அதிகமாயிற்று."

அந்த சிறு குழந்தை இருபத்திமூன்று முறை அது என்ன என்று கேட்டும் அந்த தந்தை எரிச்சலடையாமல் பொறுமையாக அந்த குழந்தைக்கு பதில் சொன்னார்.

இன்று அதே தந்தை தன் அதே மகனிடம் அதே கேள்வியை வெறும் நாலு முறை கேட்டதற்கு அந்த மகன் எரிச்சலையும் கோபத்தையும் காட்டினார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன:

உங்கள் பெற்றோருக்கு வயதாகி விட்டால் அவர்களை ஒதுக்கவோ, அவர்களை உங்களுக்கு ஒரு பாரமாகவோ நினைக்காதீர்கள். அவர்களுடன் அன்பாக நாலு வார்த்தை பேசுங்கள், பணிவாக இருங்கள், அவர்களுக்கான மரியாதையை கொடுங்கள்.அவர்களை புரிந்துக் கொள்ளுங்கள்.


இன்று முதல் சத்தமாக உரக்க சொல்லுங்கள், "என் பெற்றோர் எப்பொழுதும் சந்தோசமாக இருக்கவேண்டும். நான் சிறு குழந்தையாக இருந்தப் போதிலிருந்து அவர்கள் என்னை பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். தன்னலமற்ற அன்பை அவர்கள் என்மீது எப்போதும் காட்டியிருக்கிறார்கள். எல்லா கஸ்டத்தையும், துயரங்களையும் தாங்கள் ஏற்றுக்கொண்டு, வெயில், புயல், மழை அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டு என்மீது ஒரு சிறு தூசியும் படாமல் பாதுகாத்து இன்று என்னை இந்த அளவிற்கு சமுதாயத்தில் ஒரு உயர்நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இன்றைய என் நிலைக்கு அவர்களே காரணம்."

இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், "நான் எனது வயதான பெற்றோர்களுக்கு மிக சிறந்த முறையில் சேவை செய்வேன். அவர்கள் எப்படி நடந்துக்கொண்டாலும் நான் என் பெற்றோரிடம் மிக நல்ல அன்பான வார்த்தைகளை மட்டும் பேசுவேன்."

இந்த உலகில் முடியாது என்று எதுவுமே இல்லை. முடியும் என்றொரு வார்த்தை இருப்பதால் தான் முடியாது என்ற வார்த்தை தோன்றியது. ஆதலால் முடியும் என்பது நிச்சயமான உண்மை.


Nothing in this world is IMPOSSIBLE ,,, coz the word IMPOSSIBLE itself says I M POSSIBLE..

KEEP SMILING ALWAYS




என்றும் புன்னகை உங்கள் அணிகலனாய் இருக்கட்டும்




நன்றி: பரம்

--

மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்: http://groups.google.com/group/muththamiz
--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4