Thursday, January 04, 2007

அகமே புறம் - பகுதி 6

அகமே புறம் - 6

அதிகாரம் - 3

பழக்கத்தை உண்டாக்கல் - 2



சரியான் காரியத்தைச் செய்தலினும் பிசகான காரியத்தைச் செய்தல் எளிதென்றும், புண்ணியத்தைச் செய்தலினும் பாவத்தைச் செய்தல் எளிதென்றும், சாதாரணமாகச் சொல்லப்படுகிறது. அந்நிலைமை அநேகமாக எல்லோராலும் நித்தியத்தன்மை யுடைய தெனக் கொள்ளத்தக்க தாகி விட்டது.

ஆசிரிய சிரேஷ்டரான புத்தரும் "தீய வினைகளையும் நமக்குத் துன்பத்தைத் தரும் வினைகளையும் செய்தல் எளிது; நல்ல வினைகளையும் நமக்கு இன்பத்தைத் தரும் வினைகளையும் செய்தல் அரிது..." என்று கூறியுள்ளார்.

இது மனித சமூகம் சம்பந்தப்பட்ட மட்டில் உண்மையானாலும் மனிதர் அபிவிருத்தியடையும் மார்க்கத்தில் கண்டு கழிக்கும் ஒரு அநுபவமேயன்றிப் பொருட்களின் ஸ்திரமான நிலைமையன்று, நித்தியத் தன்மை யுடைய தன்று; சரியான காரியத்தைச் செய்தலினும் பிசகான காரியத்தைச் செய்தல் மனிதர்களுக்குச் சுலபமாகத் தோற்றுவதற்குக் காரணம் அவர்களிடத்துலுள்ள மடமையும் அவர்கள் வாழ்வின் நோக்கத்தையும் பயனையும் அறியாமையுமே.
ஒரு குழந்தை எழுதுதற்குக் கற்றுக்கொள்ளுங் காலையில் எழுதுகோலைப் பிசகாகப் பிடித்தலும் அச்ஷரங்களைப் பிசகாக எழுதுதலும் அதற்கு மிகச் சுலபமாகவும்; எழுதுகோலைச் சரியாகப் பிடித்தலும் அச்ஷரங்களைச் சரியாக எழுதுதலும் அதற்கு மிகப் பிரயாசமாகவும் தோற்றுகின்றன; விடாமுயற்சியாலும் அப்பியாசத்தாலும் ஒழிக்கக் கூடிய எழுதற்றொழிலின் அறியாமை அதனிடத் திருத்தலான்.

கடைசியாக அவ்வஞ்ஞானம் நீங்கிய பின்னர் எழுதுகோலைச் சரியாகப் பிடித்தலும், அச்ஷரங்களைச் சரியாக எழுதுதலும் அக்குழந்தைக்கு இயற்கையும் சுலபமுமாகிவிடுகின்றன. அக்காலத்தில் பிசகான காரியத்தைச் செய்தல் பிரயாசமாகவும் முற்றிலும் அநாவசியமாகவும் அதற்குத் தோற்றுகிறது.

இவ்வுண்மை மனத்தின் காரியங்கட்கும் வாழ்க்கையின் காரியங்கட்குமசமமாகப் பொருந்தும். சரியான காரியத்தை நினனத்தற்கும்
செய்தற்கும் அதிக அப்பியாசமும் விடாமுயற்சியும் வேண்டும்; சரியான காரியத்தை நினைத்தலும் செய்தலும் இறுதியில் இயற்கையும் சுலபமுமாகின்றன; அப்பொழுது பிசகான காரியத்தைச் செய்தல்பிரயாசமாகவும் முற்றிலும் அநாவசியமாகவும் தோற்றுகிறது.

ஒரு சிற்பி அப்பியாசத்தினால் தனது தொழிலில் தேர்ச்சியடைதல் போல, ஒரு மனிதன் அப்பியாசத்தினால் நல்வினையில் தேர்ச்சியடைதல் கூடும்; அது புதிய நினைப்புக்களால் புதிய பழக்கங்களை உண்டுபண்ணுதலே யன்றி வேறன்று; எவனுக்குச் சரியான நினைப்புக்களை நினைத்தலும் சரியான செயல்களைச் செய்தலும் சுலபமாகவும், பிசகான நினைப்புக்களை நினைத்தலும் பிசகான செயல்களைச் செய்தலும் பிரயாசமாகவும் தோற்றுகின்றனவோ, அவன் எல்லாவற்றிலும் உயர்ந்த ஒழுக்கத்தையும் ஒப்புயர்வற்ற தூய ஆன்ம ஞானத்தையும் அடைந்து விட்டான்.


மனம் விரியும்....


நன்றி

ஜேம்ஸ் ஆலன்
சுவாமி வனஜானந்தா
வ.உ.சி.
பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி
Dr.M.S.உதயமூர்த்தி
Mind Engineering - K.Raveendran
The Art of Excellence - K.Raveendran

அகமே புறம் - பகுதி 5

அகமே புறம் - 5

அதிகாரம் - 3

பழக்கத்தை உண்டாக்கல் - 1


நிலைத்த மனோநிலைமை ஒவ்வொன்றும் மனிதனால் ஈட்டப்பட்ட பழக்கம்; அது திரும்பத் திரும்பத் தொடர்ந்து நினைக்கப்பட்டதால் பழக்கமாகியிருக்கிறது. தளர்ச்சியும்,உற்சாகமும், வெகுளியும், பொறுமையும், இவறன்மையும் ஈகையும், உண்மையில் மனத்தின் சகல தன்மைகளும் மனிதனால் தெரிந்து கொள்ளப்பட்ட நினைப்புக்கள்; அவை தாமாக நிகழும் வரை திரும்பத் திரும்ப நினைக்கப்பட்டுப் பழக்கங்களாகி யிருக்கின்றன. அடிக்கடி நினைக்கப்பட்ட ஒரு நினைப்பு, கடைசியில் மனத்தின் ஒரு ஸ்திரமான பழக்கமாகின்றது. அத்தகைய பழக்கங்களிலிருந்து வாழ்க்கை வருகின்றது...

தனது அநுபவங்களைத் திரும்பத் திரும்ப கொள்ளுதலால் அறிவை அடையும் இயற்கையுள்ளது மனம். முதலில் கிரகிப்பதற்கும் சிந்திப்பதற்கும் அதிகப் பிரயாசமாகத் தோன்றும் ஒரு நினைப்பு அடிக்கடி மனத்திற் கொள்ளப்படுதலால் பழக்கமும் இயற்கையும் ஆகின்றது.

ஒரு சிறுவன் ஒரு கைத்தொழிலைக் கற்கத்தொடங்குங்காலத்தில் தனது கருவிகளைச் சரியாகப் பிடிக்கவும் முடியாது, உபயோகிக்கவும் முடியாது. ஆனால், அவன் திரும்பத் திரும்ப நீண்டகாலம் அப்பியாசம் செய்த பின்னர் அவற்றை மிகச்சுலபமாகவும் சாமர்த்தியமாகவும் உபயோகிக்கிறான். அதுபோல, முதலில் அடைவதற்கு முடியாததாகத் தோற்றும் ஒரு மனோபாவம் விடாமுயற்சியாலும் அப்பியாசத்தாலும் கடைசியில் அடையப்பட்டு முயற்சியின்றி இயற்கையாக நிகழ்கின்ற ஒரு நிலைமை ஆகின்றது.
தனது பழக்கங்களையும் நிலைமைகளையும் ஆக்கற்கும் திருத்தற்கும்
மனத்திற்கு வலிமையுண்டு. இவ்வலிமை மனிதனது முத்திக்குக் காரணமாக இருப்பதுந்தவிர, தன்னை ஆளுதலால் அடையப்படும் பூரண சுதந்திரத்தையடையும் வழியைக் காட்டுகிறது. ஏனெனின், ஒரு மனிதன் தீய பழக்கங்களை உண்டு பண்ணிக்கொள்ளும் சக்தியை உடையவனாயிருப்பதுபோல, நல்ல பழக்கங்களை உண்டுபண்ணிக்கொள்ளும் சக்தியையும் உடையவனாயிருக்கிறான்.

இப்பொழுது நான் சொல்லும் விஷயத்தைச் சிறிது விளக்கிக் கூற வேண்டுவது அவசியம். இதனைப் படிப்பவரும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்...

மனம் விரியும்....





நன்றி
ஜேம்ஸ் ஆலன்
சுவாமி வனஜானந்தா
வ.உ.சி.
பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி
Dr.M.S.உதயமூர்த்தி
Mind Engineering - K.Raveendran

அகமே புறம் - பகுதி 4

அகமே புறம் - 4
மனத்தின் தன்மையும் வன்மையும் -3

சகல வளர்ச்சியும் வாழ்வும் அகத்திலிருந்து புறத்திற்கு வ்ருகின்றன; சகல தேய்வும் அழிவும் புறத்திலிருந்து அகத்திறகுச் செல்கின்றன. இது பிரபஞ்சத்தின் ஒரு விதி.

சகல விரிவுகளும் அகத்திலிருந்து நிகழ்கின்றன; சகல திருத்தங்களும் அகத்தில் செய்யப்படவேண்டும். எவன் பிறரோடு போராடுதலை விட்டுத் தனது மனத்தைத் திருத்துவதிலும், பலப்படுத்துவதிலும், வளர்ப்பதிலும், தனது சக்திகளைப் பிரயோகிக்கிறானோ அவன் தனது சக்திகளையெல்லாம் ஒருமுகப்படுத்தித் தன்னைப் பாதுகாத்துக்கொள்கிறான்; அவன் தனது மனத்தைச் சமநிலையில் நிற்கச்செய்த பொழுது இரக்கத்தாலும் ஈகையாலும் பிறரையும் அந்த நிலைமைக்குக் கொண்டு வருகிறான்; ஏனெனில், ஒருவன் பிறருடைய மனத்தை நடத்துவதும் ஆளுவதும் ஞானத்துக்கும் சாந்திக்கும் வழிகள் அல்ல; தனது சொந்த மனத்தின் மீது தனது நியாயமான அதிகாரத்தைச் செலுத்துவதும் உயர் தர ஒழுக்கங்களாகிய சன்மார்க்கங்களில் தன்னை நடத்துவதும் ஞானத்துக்கும்
சாந்திக்கும் வழிகள்.

ஒருவனுடைய வாழ்வு அவனது அகத்தினின்றும் அவனது மனத்தினின்றும் வருகிறது. அவன் அந்த மனத்தைத் தனது சொந்த நினைப்புக்களையும் செயல்களையும் கலந்து உண்டுபண்ணியிருக்கிறான். அவன் தனக்கு வேண்டும் நினைப்புகளைத் தெரிந்தெடுத்துத் தனது மனத்தைத் திருத்தும் சக்தியை உடையவன். ஆகையால், அவன் தனது வாழ்வையும் திருத்திக் கொள்ளக்கூடும். ஆன்றோரும்,
"ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்"

என்று கூறியுள்ளார்.

மனம் விரியும்.....

நன்றி
ஜேம்ஸ் ஆலன்
சுவாமி வனஜானந்தா
வ.உ.சி.
பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி
Dr.M.S.உதயமூர்த்தி

அகமே புறம் - பகுதி 3

அகமே புறம் - 3.



மனத்தின் தன்மையும் வன்மையும் -2


தனது சொந்த நிலைமைகளைச் சிருஷ்டித்துக் கொள்வதற்கும், தான் வாழ்வதற்குத்தக்க நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கும், ஏற்ற சக்தி மனத்தினிடத்தில் உண்டு. மனம் எந்த நிலைமையையும் மாற்றுதற்கும், எந்த நிலைமையை விட்டொழித்தற்கும், வல்லமையுடையது.

ஆன்றோரும்,

"கெடுக்க வல்லதுங் கெட்டவர் தங்களை

யெடுக்க வல்லது மிம்மனம்...."

என்று கூறியுள்ளார்.

அது பல நிலைமைகளை ஒன்றன்பின் ஒன்றாக அநுபவித்து அவற்றின் ஞானத்தை அடையுங் காலையில் தனது நிலைமைகளை ஒன்றன்பின் ஒன்றாக் மாற்றிக்கொண்டும், கைவிட்டுக்கொண்டும் இருக்கிறது.

உள்நோக்கும் நினைப்புக்கள் ஒழுக்கத்தையும் வாழ்வையும் உண்டு பண்ணுகின்றன; நினைப்புக்களை மனிதன் தனது விருப்பத்தாலும் முயற்சியாலும் திருத்திக்கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் கூடும். பழக்கமும் பலவீனமும் பாவமுமாகிய தளைகள் தன்னாலேயே யுண்டுபண்ணப்படுகின்றவை; அவை தன்னால் மாத்திரம் அழிக்கப்படக்கூடும்; அவை ஒருவனுடைய் மனத்திலின்றி வேறெங்கும் இல்லை; அவை புறப்பொருட்களோடு சம்பந்தப்பட்டிருந்த போதிலும் அவை உண்மையில் அப் புறப்பொருட்களின் கண் இல்லை.

புறம் அகத்தால் ஆக்கவும் திருத்தவும் படுகிறது. அகம் ஒருபோதும் புறத்தால் ஆக்கப்படுவதும் திருத்தப்படுவதும் இல்லை. மனக்கவர்ச்சிக்கு ஏது புறப்பொருளில் இல்லை; ஆனால், அப்பொருளின் மீது மனம் கொண்டிருக்கிற ஆசையில் இருக்கிறது. துன்பமும் நோவும் புறப்பொருட்களிலும் வாழ்வின் சம்பவங்களிலும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை; ஆனால், அப்பொருட்களை அல்லது சம்பவங்களைப் பற்றிய மனத்தின் ஓர் ஒழுங்குபடாத நிலைமையில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. தூய்மையால் ஒழுங்கு செய்யப்பட்டு, ஞானத்தால் பலப்படுத்தப்பட்ட மனம் பிரிக்கக்கூடாத வண்ணம் துன்பத்தோடு கட்டப்பட்டுள்ள சகல அவாக்களையும் காமங்களையும் ஒழித்துத் தெளிவையும் சாந்தியையும் அடைகிறது.

பிறரைக் கெட்டவர் என்றலும், கெடுதிக்கு மூலம் புறநிலைமைகள் என்றெண்ணி அவற்றோடு போராடுதலும் உலகத்தின் துன்பத்தையும், அமைதியின்மையையும் அதிகப்படுத்துவதன்றிக் குறைப்பதில்லை. புறம் அகத்தின் நிழல், அகத்தின் ககரியம். அகம் சுத்தமாயிருக்கும்பொழுது புறத்திலுள்ள சகல காரியங்களும் சுத்தமாயிருக்கின்றன. ஆன்றோரும்,
"கற்றதங் கல்வியுங் கடவுட் பூசைய
நற்றவ மியற்றலு நவையி றானமு
மற்றுள வறங்களு மனத்தின் பாலழுக்
கற்றவர்க் கேபய னளிக்கு மென்பரால்"

என்று கூறியுள்ளார்.

மனம் விரியும்....

நன்றி
ஜேம்ஸ் ஆலன்
வ.உ.சி.
பிரஹ்மஸ்ரீ கோபால்ஜி
Dr.M.S.உதயமூர்த்தி

அகமே புறம் - பகுதி2

அகமே புறம் - 2.



மனத்தின் தன்மையும் வன்மையும் -1



மனம் வாழ்வை விதிக்கும் நியந்தா; நிலமைகளைச் சிருஷ்டித்துது திருத்தும் கர்த்தா; தந்து சொந்தப் பலன்களை அநுபவிக்கும் போக்தா; பொய்யைச் சிருஷ்டிக்கும் திறனும் மெய்யைக் காணும் திறனும் மனத்திற்கு உண்டு. ஆன்றோரும் "மனத்தானா மாந்தர்க்குணர்ச்சி" என்று கூறியுள்ளனர்.



மனம் தளர்ச்சியின்றி வாழ்க்கை நிலைமையாகிய வஸ்திரத்தை நெய்து கொண்டிருக்கிறது; நினைப்பு நூல். நல்ல செயல்களும் தீய செயல்களும் பாவும் ஊடும். ஒழுக்கம், வாழ்வாகிய தறியில் நெய்யப்படும் வஸ்திரம். மனம் தான் நெய்த வஸ்திரத்தால் தன்னை உடுத்திக்கொள்கிறது.



மனிதன் மனத்தையுடைய உயிராகையால் மனத்தின் சகல சக்திகளையும் உடையவனாயிருக்கிறான். தான் விரும்புவனவற்றையெல்லாம் அடைதற்குத் தக்க கருவிகளைக் கொண்டிருக்கிறான். அவன் தனது அனுபவத்தினால் கற்கிறான்; அவன் தனது அநுபவத்தை மிகுக்கவும் குறைக்கவும் கூடும். அவன் பிறரால் எந்த இடத்திலும் கட்டுப்பட்டிருக்கவில்லை; ஆனால் அவன் தானே தன்னைப் பல இடங்களில் கட்டுப்படுத்தியிருக்கிறான்; அவன் தானே தன்னைக் கட்டுப்படுத்தியிருப்பதால், அவன் நினைத்த மாத்திரத்தில் தானே தன்னை அக்கட்டிலிருந்து நீக்கிக்கொள்ளக்கூடும்.



அவன் தான் விரும்புகிறபடி தீயனோ அல்லல்து தூயனோ,கீழானோ அல்லது மேலானோ, மடையனோ அல்லது அறிஞ்சனோ ஆகக்கூடும். அவன் சில செயல்களைத் திரும்பத்திரும்பச் செய்து பழக்கங்களாக்கிக் கொள்ளலாம்; அவன் அவற்றிற்கு மருதலையான செயல்களை மென்மேலும் செய்து அப் பழக்கங்களை அழித்துவிடலாம். அவன் மெய்ப்பொருள் முழுவதும் தனக்கு மறைபடும் வரை தன்னைச் சுற்றிப் பொய்கலை அமித்துக் கொள்ளக்கூடும்; அவன் மெய்ப்பொருளைப் பூரணமாகக் காணும்வரை தன்னைச்சுற்றி பொய்களை ஒன்றின்பின் ஒன்றாக அழித்துவிடக்கூடும். அவன் செய்யக் கூடியன அளவற்றன்; அவன் பூரண ச்வதந்திரத்தையுடையவன். ஆன்றோரும்,



"நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந் தன்னை

நிலைகலக்கிக் கீழிடு வானு-நிலையினு

மேன்மே லுயர்த்து நிறுப்பானுந் தன்னைத

தலையாகச் செய்வானுந் தான்."



என்று கூறியுள்ளார்.



நண்பர்களே கட்டுரையின் கட்டுமானமும் சரி நடையும் சரி சாரமும் சரி கடினமாயிருக்கும் என்பதால் சின்ன சின்ன பகுதிகளாக்கித் தருகிறேன்...

பின் குறிப்பு

நன்றி:

As A Man Thinketh by James Allen
மனம் போல் வாழ்வு - வ.உ.சி.

வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் - Dr.M.S.உதயமூர்த்தி...

இது என் சொந்தக் கட்டுரை அல்ல... ஜேம்ஸ் ஆலன் மூலம். அதன் பின்னர் வ.உ.சி யின் மனம் போல் வாழ்வு, என் இனிய நண்பர் Dr.M.S.உதய மூர்த்தியின், "வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்" ஆகியவற்றிலிருந்து "சுட்டது..."

அகமே புறம் - பகுதி 1

அகமே புறம்
-------------

அகத்தை யொத்தெ புறம்(வாழ்வு) அமைகின்றது. அகம் இடைவிடாது புறமாகிக் கொண்டிருக்கிறது. எதுவும் வெளிப்படாமல் இருப்பதில்லை. எது மறைபட்டிருக்கிறதோ அது சிறிது காலத்திற்கு மட்டுமே மறைபட்டிருக்கிற்து. அது முதிர்ந்து கடைசியாக வெளிப்பட்டே விடுகிறது.

வித்து,மலர்,கனி,இவை ஒன்றன் பின் ஒன்றாகவும்,ஒன்றிலிருந்து ஒன்றாகவும், எந்த முறையில் வெளிப்பட்டு நிலவுகின்றனவோ அந்த முறையிலேயே பிரபஞ்சமும் நிலவுகின்றது. மனிதனது அகத்தின் நிலைமையிலிருந்து அவனது புறத்தின் நிலைமைகள் வருகின்றன. அவனது நினைப்புக்கள் அவனது செயல்களாக மலர்கின்றன. அவனது செயல்கள் அவனுடைய ஒழுக்கமும் புற நிலைமையுமாகிய கனிகளைக் கொடுக்கின்றன.

மனிதன் தனது அகத்தின் அரசன்; தனது மனத்தின் காவலன்; தனது வாழ்க்கையாகிய
கோட்டையின் தனிக் காப்பாள்ன்.அவன் அந்த முறைமையில் ஊக்கமேனும் தூக்கமேனும் கொண்டிருக்கக்கூடும். அவன் தனது மனத்தை அதிகப்பிரயாசத்தோடு பாதுகாத்துச் சுத்தப்படுத்திக்கொள்ளக்கூடும்; அவன் நியாயமற்ற நினைப்புகளை நினையாது தன்னைக் காத்துக்கொள்ளக்கூடும்.

இஃது அறிவு விளக்கத்திற்கும் இன்பப் பேற்றிற்கும் மார்க்கம். இதற்கு மாறாக, அவன் தனது ஒழுக்கத்தைச்
சரியாகத் திருத்துவதாகிய மேலான கடமையைச் செய்யாது எச்சரிக்கையும் திருத்தமுமின்றி வாழக்கூடும். இஃது அறிவு மயக்கத்திற்கும் துன்ப அடைவிற்கும் மார்க்கம்..

ஒரு மனிதன் தன் வாழ்வு முழுவதும் தனது மனத்தினின்றே வருகிறதென்று அறிவானானால் அப்பொழுதே அவனுக்குப் பேரின்ப வீட்டின் வழி திறக்கப்பட்டிருக்கிறது. அவன் அப்பொழுது தனது மனத்தை ஆள்வதற்கும் தனது இலட்சியத்திற்குத் தக்கபடி தன்னைத் திருத்திக்கொள்வதற்கும் தக்க வலிமை தன்னிடத்தில் இருப்பதைக் காண்பான்.

அப்படியே அவன் முற்றும் மேம்பாடான நினைப்பையும் செயலையும் மேற்கோண்டு நேராகவும் உறுதியாகவும் நடப்பான். அவனுக்கு வாழ்க்கை இனியதாகவும் தூயதாகவும் அமையும். அவன் சிறிது முன்னகவோ பின்னகாவோ, சகல தீமைகளையும் சகல கவலைகளையும் சகல துன்பங்களையும்
போக்கிவிடுவான்.ஏனெனில்-

தனது அகத்தின் வாயிலைத் தளராத ஊக்கத்துடன் காத்து வருகிற ஒரு மனிதன் ஞானத்தையும் துக்க நிவர்த்தியையும்,சுகப் ப்ராப்தியையும் அடையாமல் இரான்.
நண்பர்களே... இந்தக் கட்டுரைத்தொடர் உங்களுக்கு உபயோகமாய் இருக்குமா எனத் தெரிவிக்கவும்...என்னைச் செதுக்கிய திரு ஜேம்ஸ் ஆலன் அவர்களின் மூலத்திலிருந்து....

--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4